நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைப் படுத்தப்படுகிறது. இந்நிலையில் விதிமுறைகளை மீறியதாக நெல்லை பிரஸ் கிளப் கூட்ட அரங்கிற்கு 11.03.19 நேற்று சீல் வைக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ள வளாகத்தில் நெல்லை பிரஸ் கிளப் கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் முதல் தளத்தில் கூட்ட அரங்கு உள்ளது. அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தேர்தல் விதிமுறைகளை அமல்படுத்தப் பட்டுள்ள நிலையில் அதை மீறும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தேர்தல் பொறுப்பாளர் சஞ்சய்தத், செயல் தலைவர்கள் வசந்தகுமார் எம்.எல்.ஏ., விஷ்ணுபிரசாத் ஆகியோர் பேட்டி அளித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு புகார் வந்ததை அடுத்து நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சியினர் இதுபோல் இங்கு வந்து பேட்டி அளிக்க வாய்ப்பு உள்ளதாகவும்,எனவே நெல்லை பிரஸ் கிளப் கூட்ட அரங்கிற்கு நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை சீல் வைத்து, அந்த சாவியை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் ஒப்படைக்குமாறும் பாளையங்கோட்டை தாசில்தாருக்கு நெல்லை நாடாளுமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயலட்சுமி உத்தரவிட்டார்.
அந்த உத்தரவின் பேரில் பாளையங்கோட்டை தாசில்தார் கனகராஜ் தலைமையில் அதிகாரிகள் பிரஸ் கிளப்பிற்கு வந்து கூட்ட அரங்கிற்கு சீல் வைத்தனர். இதையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு எதிராக பத்திரிகை சுதந்திரத்தின் குரல் வளையை நசுக்கும் செயல் எனக்கூறி அனைத்து பத்திரிகையாளர்கள் அமைப்புக்களும் தங்களின் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.