கடந்த 26.06.2018 செவ்வாய்க்கிழமை அன்று பகல் 12 மணியளவில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அருகில் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மாத்ரூபூமி செய்தியாளர் அனுப் தாஸ், ஒளிப்பதிவாளர் முருகன் மற்றும் வாகன ஓட்டுநர் ரசாக் மூவரையும் திருவண்ணாமலை தாலுகா காவல்துறையினர் திடீரென சிறைப்பிடித்து காவல் வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றுள்ளனர்.
இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட செய்தியாளர் அனுப் தாஸ், ஒளிப்பதிவாளர் முருகன் ஆகியோர் தங்களது அடையாள அட்டையை காண்பித்தும் காவல்துறையினர் எதையும் பொருட்படுத்தவில்லை. சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் காவல்துறை உயரதிகாரிகளிடம் தொடர்ந்து பேசி அழுத்தம் தந்ததன் பேரில் பத்திரிகையாளர்கள் காவல் நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் பத்திரிகையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்கள், மிரட்டல்கள், பொய் வழக்கு பதிவு செய்யப்படுதல் ஆகியவை அதிகரித்து வருவது பெரும் கண்டனத்துக்குரியது.
இந்த நிலையில் கீழ்கண்ட கேள்விகளுக்கு காவல்துறை பதில் தரவேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது :-
1.செய்தி சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பத்திரிகையாளர்கள் எந்த அடிப்படையில் கைது செய்யப்பட்டார்கள்?
2.அரசு வழங்கிய செய்தியாளர் அங்கீகார அட்டையைக் காண்பித்தும் பத்திரிகையாளர் மீது மிரட்டலும் ,அடக்குமுறையும் ஏன்?
3.தொடர்ந்து காவல்துறை பத்திரிகையாளர்களை மிரட்டுவது ஏன்?
4.பத்திரிகையாளர், காவல்துறை மோதல்களை தடுக்க,குறைக்க ஆக்கப்பூர்வமாக எந்தவிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?
இன்றைய சூழலில் பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிப்பில் பல்வேறு விதமான இடையூறுகள், தடைகளை சந்தித்து வருகின்றனர். பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு தரவேண்டிய காவல்துறையும் பத்திரிகையாளர்கள் மீது பொய் வழக்கு போடுவது, தாக்குவது, மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால், அது பத்திரிகை சுதந்திரத்தை இன்னும் படுகுழியில் தான் தள்ளும்.
மேற்கொண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், பத்திரிக்கையாளர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியும் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் இணைச் செயலாளர் பாரதி தமிழன், தமிழக காவல்துறை தலைவர் டி.கே.எஸ்.இராஜேந்திரனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
You must be logged in to post a comment.