இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு குறித்த முதல்வரின் அறிவிப்பு; பொதிகை தமிழ்ச்சங்க தலைவர் கவிஞர் பேரா வரவேற்பு..
சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பை நெல்லை பொதிகை தமிழ்ச்சங்கம் வரவேற்றுள்ளது. இது குறித்து பொதிகை தமிழ்ச்சங்க நிறுவனர் கவிஞர் பேரா வெளியிட்டுள்ள அறிக்கையில், “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்பான் மகாகவி பாரதி. மூத்த தமிழ் அறிஞர் பரிதிமாற்கலைஞர் தமிழ் மொழியை உயர்தனிச் செம்மொழி என்றழைத்து மகிழ்வார். வளம் மிக்க நமது தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி நிலை கிடைப்பதற்கு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் பங்களிப்பு அளப்பரியது. ஒரு நூற்றாண்டு கால தமிழர்களின் கனவுகளை நினைவாக்கும் விதமாக செம்மொழி என்கின்ற தகுதியை முத்தமிழறிஞர் கலைஞரின் முயற்சியால் தமிழ் அடைந்தது.
அந்த செம்மொழியாம் தமிழுக்கு முதல் செம்மொழி மாநாட்டினை கோயம்புத்தூரில் டாக்டர் கலைஞர் நடத்தினார். இப்போது 2025-ஆம் ஆண்டில் ஜூன் மாதம் சென்னையில் இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. முதலமைச்சரின் இந்த அறிவிப்பை பொதிகைத் தமிழ்ச் சங்கம் வரவேற்கிறது. இந்த மாநாடு சிறப்பாக நடந்திடவும், தமிழ் மொழி இன்னும் உயர்ந்து விளங்கிடவும் முயற்சி எடுத்து வரும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளையும் மனமாற பாராட்டுகிறோம். சென்னையில் 2025- ஆம் ஆண்டில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுமென அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு நெல்லை பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் பேரா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.