மதுரை அருகே உள்ள திருநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்த அழகர்சாமி (74) மற்றும் அவரது மனைவி சகுந்தலா (70) ஆகியோர், தமிழ்நாடு மூத்த குடிமக்கள் நல ஆணையத்தில் ஒரு புகார் மனு அளித்திருந்தனர்.அதில், ‘பாண்டியன் நகரில் உள்ள தங்களுக்கு சொந்தமான வீடு, 90 பவுன் நகைகள் மற்றும் காரை தனது மகள்கள் கிருத்திகா, சியாமளா ஆகியோர் அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவருடன் இணைந்து அபகரித்துக் கொண்டனர். அத்துடன், எங்கள் இருவரையும் திருப்பரங்குன்றத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு சென்றுவிட்டனர். தற்போது நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம்’ என கூறப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, மதுரை மாவட்ட கலெக்டர் ராஜசேகரின் உத்தரவின் பேரில் திருமங்கலம் கோட்டாட்சியர் முருகேசன், முதியவர்கள் அழகர்சாமி – சகுந்தலா தம்பதியினரை அழைத்து விசாரணை நடத்தினார். அதேபோல், சொத்துக்களை கைப்பற்றி வைத்திருக்கும் மகள் கிருத்திகா, சியாமளா மற்றும் அவருக்கு உதவிய கணேசனையும் அழைத்து விசாரணை நடத்தினார்.அப்போது, சொத்துக்களைப் பறித்துக் கொண்டு பெற்றோரை கவனிக்காமல் கைவிட்டு இருப்பது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து, மகள்கள் அனுபவித்து வந்த திருநகர் பாண்டியன் நகரில் உள்ள 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டின் பதிவுகளை ரத்து செய்த கோட்டாட்சியர் முருகேசன், அந்த வீட்டை மீண்டும் அழகர்சாமி – சகுந்தலா தம்பதியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.மேலும், அவர்களுக்கு சொந்தமான 90 பவுன் நகை மற்றும் காரை மீட்டுக் கொடுக்க திருநகர் போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
You must be logged in to post a comment.