கேரள மாநில மக்களின் கலாச்சார பாரம்பரியமாக ஆண்டு தோறும் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கேரள மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. அந்த வகையில் தென்காசி குத்துக்கல் வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. பள்ளியில் பல வண்ண மலர்களால் அத்தப்பூ கோலம் இடப்பட்டு குத்துவிளக்கேற்றி வைக்கப்பட்டது. பல்வேறு பழ வகைகளுடன் மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
அத்தப்பூ கோலம் இட்ட பகுதியில் ஆசிரியர்கள் வேஷ்டி, சட்டை அணிந்தும், ஆசிரியைகள் கேரள பாரம்பரிய சேலை அணிந்தும், பள்ளி மாணவ, மாணவிகள் கேரள பாரம்பரிய உடையும் அணிந்து கொண்டு ஓணம் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு ஆக்ஸ்போர்டு பள்ளியின் சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே. திருமலை தலைமை தாங்கி ஓணம் பண்டிகை சிறப்புகள் குறித்து பேசினார். பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான தி. மிராக்ளின் பால் சுசி, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கே.எஸ். கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலக ஊழியர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் அத்தப்பூ கோலம் இட்ட பகுதியில் நின்று போட்டோ, செல்பி எடுத்து வாழ்த்துக்கள் கூறி மகிழ்ந்தனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.