திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள அணைப்பட்டி வைகை ஆற்றில் கடந்த சில தினங்களாக சில மர்ம நபர்கள் பட்டப்பகலிலேயே மணலை திருடி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் துறைக்கு பல்வேறு துறையினர் மணல் திருட்டை தடுக்க கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் சுமார் 1 மணி அளவில் அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலுக்கு மேற்குப் பகுதியில் மர்ம நபர்கள் பட்டப்பகலில் லாரியில் மூலம் ஜே.சி.பி. எந்திரத்தை வைத்து மணலை அள்ளி கொண்டிருந்தனர். இதை அறிந்த சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் நிலக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி தகவல் தெரிவித்தனர். உடனே தனது ஆதரவாளர்களுடன் சென்று மணல் திருட்டை தடுக்க முயன்றார். அப்போது இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டது உடனடியாக நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் தகவல் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு நிலக்கோட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று மணல் திருட்டில் ஈடுபட்டவர்களுக்கும், அதிமுகவினருக்கும் நடந்த தகராறு தடுத்து கலைந்து போகச் செய்தனர். இந்நிலையில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய லாரி டிரைவர் மணல் அள்ளிய லாரியை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதன் காரணமாக நிலக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா
You must be logged in to post a comment.