தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதிக்கு மகளிர் கல்லூரி வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கேஎம்.காதர் மொகிதீன் தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது முஸ்லிம் மாணவிகள் உயர் கல்வியை தொடர்ந்திட சென்னை, லால்பேட்டை, நாகூர், புளியங்குடி உள்ளிட்ட பகுதிகளில் மகளிர் கல்லூரி துவங்கிட தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் தென்னிந்திய இஷாஅத்துல் இஸ்லாம் சபைக்குச் சொந்தமான நிலத்திற்கு 1969 முதல் பட்டா வழங்குவதில் காலதாமதம் செய்யப்பட்டு வருகிறது. அதற்குரிய பட்டா வழங்க மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்த வேண்டும். இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சார்பில் நடத்த திட்டமிட்டிருக்கும் பன்னூல் ஆசிரியர் எம்.ஆர்.எம்.அப்துல் ரஹீம் நூற்றாண்டு விழாவிற்கு முதலமைச்சர் வருகை தந்து சிறப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை பரிசீலனை செய்திட தமிழ்நாடு முதலமைச்சரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் கேட்டுக் கொண்டார். அண்டை நாடான இலங்கை மக்களின் துயர் துடைக்கும் வகையில் தமிழக மக்களின் சார்பில் வழங்கப்பட இருக்கும் நிவாரண நிதிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பில் ரூபாய் 5 இலட்சத்திற்கான வரையோலை மற்றும் மணிச்சுடர் ரமலான் சிறப்பு மலரை தமிழ் நாடு முதலமைச்சரிடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் வழங்கினார். மேலும், முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர்களின் பேருரைகள் மூன்றாம் பாகம் நூலை தமிழ்நாடு முதலமைச்சரிடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் வழங்கி வாழ்த்து பெற்றார். இச்சந்திப்பின் போது மாநில செயலாளர் கே.எம்.நிஜாமுதீன், பத்திரிகையாளர் திருச்சி ஷாகுல் ஹமீது ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.