நெல்லையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் முக்கிய பகுதிகளில் விபத்தை தடுக்கும் பொருட்டு விரைவாக வேகத்தடைகள் அமைத்திட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் நெல்லை பேட்டை பகுதியில் வேகத்தடைகள் அமைத்திட வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறை கோட்ட கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் பொதுஜன பொதுநல சங்கத்தின் தலைவர் அய்யூப், நிர்வாகிகள் செய்யது முகமது சேட், மகேஷ், மைதீன், சுல்தான் ஆகியோர் மனு அளித்தனர். அதில் நெல்லை பேட்டை ரொட்டிக் கடை பஸ் நிறுத்தம் பகுதி சாலை ஆபத்தான வளைவு கொண்டதாக அமைந்துள்ளது. இப்பகுதியில் அஞ்சலகம், கல்விக்கூடம், மருத்துவமனைகள் உள்ளதால் பொதுமக்கள் அடிக்கடி சென்று வருகின்றனர். வாகன நெரிசல் மிகுந்த இப்பகுதியில் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் அதிகமான வேகத்தில் வருவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே பேட்டை ரொட்டிக்கடை பஸ் நிறுத்தத்தில் உள்ள வளைவு பகுதி மற்றும் தலைமை அஞ்சல் அலுவலகம் அருகில் இருபுறமும் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 10 மாதங்களாக பொதுஜன பொதுநல சங்கத்தின் சார்பில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தி வந்ததாகவும், ஆனால் நடவடிக்கை ஏதுமில்லை எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரிய விபத்து நடப்பதற்கு முன்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த பகுதியில் வேகத்தடை அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை மாவட்ட பொதுஜன பொது நல சங்கத்தின் தலைவர் அயூப் கேட்டுக்கொண்டுள்ளார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.