மின் மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதி பெற்ற பயனாளிகள் தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் சிறுபான்மையின பயனாளிகளுக்கு மின் மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் செயல் படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற சிறுபான்மையினர்கள் தையல் கலை பயின்றவராக இருக்க வேண்டும் மற்றும் தையல் கலை பயின்றதற்கான உரிய சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். வருமான உச்சவரம்பு ஆண்டிற்கு ரூ.1,00,000 ஆக இருத்தல் வேண்டும். வயது வரம்பு 20 முதல் 45 வரை இருக்க வேண்டும். கைம்பெண் மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர் போன்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.ஒரு முறை தையல் இயந்திரம் பெற்றிருப்பின் மீண்டும் தையல் இயந்திரம் பெற 7 ஆண்டுகள் கடந்த பின்னரே தகுதி உடையவராககருதப்படுவர். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், இரயில் நகர், தென்காசி-627 811 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.