நெல்லை அரசு அருங்காட்சியகத்தோடு பல்வேறு கல்வி அமைப்புகள் இணைந்து இணைய வழியில் கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் “வாசிப்பே மனிதர்களை மேம்படுத்தும்” என அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்தியவள்ளி பேசினார். உலக புத்தக தினத்தை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம்,சென்னை மற்றும் கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை இணைந்து இணைய வழியிலான கருத்தரங்க நிகழ்ச்சி 23.04.2021 வெள்ளிக் கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழக கல்வியல் துறையின் உதவிப் பேராசிரியர் முனைவர் தி.பிரேமலதா வரவேற்புரை வழங்கினார். கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் ஆ.முகமது முகைதீன் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழக கல்வி உளவியல் துறையின் உதவிப் பேராசிரியர் முனைவர் த.சிவசக்தி ராஜம்மாள் தொடக்கவுரையாற்றினார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நெல்லை அரசு அருங்காட்சியக மாவட்டக் காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி சிறப்புரை வழங்கினார். அவர் பேசுகையில் “எனக்கு ஆறு,ஏழு வயதிலேயே புத்தகம் படிக்கும் ஏற்பட்டுவிட்டது. அன்று தொடங்கிய எனது வாசிப்பு இன்று வரை தொடர்கிறது. வாசிப்பு மட்டுமே மனிதர்களை மேம்படுத்தும்.”என்று குறிப்பிட்ட அவர் மகாத்மா காந்தி, ஆபிரகாம் லிங்கன் போன்ற தலைவர்கள் புத்தக வாசிப்புபற்றி கூறியதையெல்லாம் குறிப்பிட்டார். அடுத்து,பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் பேரா கருத்துரை வழங்கினார். தொடர்ந்து, கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை சார்பில் காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளிக்கு கலையாசிரியர் சொர்ணமும்,கவிஞர் பேராவுக்கு கவிஞர் சுப்பையாவும் பொன்னாடை அணிவித்தார்கள். அதனைத் தொடர்ந்து கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் முனைவர் பண்டார சிவன்,புதுச்சேரியைச் சேர்ந்த கவிதைவானில் கவி மன்றத் தலைவர் கவிதாயினி கலாவிசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக, கல்லிடைக்குறிச்சி தமிழாசிரியர் கவிஞர் உமர் பாரூக் நன்றியுரை வழங்கினார். கருத்தரங்கில் சென்னை,புதுச்சேரி உட்பட உலக நாடுகளிலிருந்து பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.