திருநெல்வேலி பொதிகைத் தமிழ்ச் சங்கமும், திருச்செங்கோடு, சங்ககிரி விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரிகளின் தமிழ் உயராய்வுத் துறைகளும் இணைந்து சித்திரைக் கவிதைக் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியை இணையவழியில் நடத்தின. தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் பா.வேலம்மாள் தலைமை தாங்கினார். நெல்லை அரசு அருங்காட்சியக மாவட்டக் காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி முன்னிலை வகித்தார். சங்ககிரி விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் தமிழ் உயராய்வுத் துறைத் தலைவர் முனைவர் ஜெயந்தி வரவேற்புரை வழங்கினார். பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழ்ச் செம்மல் கவிஞர் பேரா சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து பேசினார். கவிதைக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட மாணவிகள் “முத்திரை பதிக்கும் சித்திரை “என்ற தலைப்பில் கவிதை வாசித்தனர். கலைமாமணி கவிஞர் ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் சிறப்புரை வழங்கினார். அவர் பேசுகையில் “இலக்கியத்தில் மிகத் தொன்மையானது கவிதையாகும். நல்ல கவிதைகள், நல்ல நல்ல மனிதர்களை உருவாக்கும். இங்கு கவிதை வாசித்த மாணவிகளிடம் கவிதை வளம் நிறையவே இருப்பதை நான் பார்க்கிறேன். பாராட்டுகிறேன். இது போன்ற இலக்கிய நிகழ்ச்சிகள் நிறைய நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் புதிய படைப்பாளிகள் கிடைப்பார்கள். அதற்காக கவிதை உறவும், பொதிகைத் தமிழ்ச் சங்கமும் இணைந்து செயல்படும் “என்று குறிப்பிட்டார். உதவிப் பேராசிரியர் ப.மாசில்மா நன்றி கூறினார். நிகழ்ச்சியை மாணவிகள் கோபிகா மற்றும் கலைவாணி ஆகியோர் தொகுத்து வழங்கினர். இணையவழியில் நடந்த இந்நிகழ்ச்சியில், விவேகானந்தா மகளிர் கல்லூரிகளின் மாணவிகள்,பேராசிரியர்கள் மற்றும் பொதிகைத் தமிழ்ச் சங்கத்தினர் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.