Home செய்திகள் நெல்லையில் மின்சாரம் தாக்கி பணியாளர் பலி..

நெல்லையில் மின்சாரம் தாக்கி பணியாளர் பலி..

by mohan

வள்ளியூர் அருகேயுள்ள சமூக ரெங்கபுரத்தில்  தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த  மின் வேலியினை தொட்ட போது மின்சாரம் தாக்கி பணியாளர் ஒருவர் பரிதாபமாக உயரிழந்தார்.நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகேயுள்ள சமூக ரெங்கபுரத்தினை சேர்ந்தவர் ஹரி கண்ட பெருமாள்.இவர் ஊருக்கு வெளியே உள்ள தனது தோட்டத்தில் காட்டுப் பன்றிகள் நுழைந்து பயிர்கள் மற்றும் இதர  புஞ்சை பயிர்களை  நாசம் செய்யாமலிருக்க முள் வேலி அமைத்து அதில் இரவில் மின்சாரம் பாய்ச்சி விட்டு மறு நாள் காலையில் வந்து அதை நிறுத்தி விடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் வழக்கம் போல முள் வேலியில் மின்சாரத்தை பாய்ச்சி விட்டு  வீட்டிற்கு சென்று விட்டார். ஆனால் மறு நாள் காலையில் மின்சார சுவிட்சை அணைக்க மறந்து விட்டார். அப்போது அவரது தோட்டத்திற்கு வேலை செய்வதற்காக அதே ஊரை சேர்ந்த பெரிய சாமி என்பவர்  வந்துள்ளார். எதிர்பாராத விதமாக முள் வேலியில் பெரியசாமியின் கை பட்டதால் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவமறிந்து  இறந்தவரது உறவினர்கள் விரைந்து சென்று ராதாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீசார்  உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக  பாளை. ஹைகிரவுண்ட்  அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே இறந்த நபர் மின்சாரம் தாக்கி இறக்க வில்லையென தோட்டத்தின் உரிமையாளர் கூறியதால் இறந்தவரது உறவினர்கள் மற்றும் பொது மக்கள் அவரது உடலை வாங்க மறுத்துள்ளனர். மேலும் இறந்தவரது உடற்கூறு ஆய்வு முடிவினை வெளியிட்டு அதன்படி அவரது குடும்பத்திற்கு  நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டுமெனவும் சமூக ரெங்கபுரம்  திருச்செந்தூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com