தென்காசி மாவட்டம், இலத்தூர் விலக்கு வேலு டிரஸ்ட் பயிற்சி மையத்தில் தாட்கோ மற்றும் வேலு டிரஸ்ட் இணைந்து நடத்தும் இலவச தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கீ.சு.சமீரன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலம் பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறை படுத்தப்படுகின்றன. ஆதிதிராவிடர்களின் வாழ்க்கைத்தரம் மற்றும் சமுக பொருளாதார மேம்பாட்டிற்காக மகளிர் வேளாண் நிலம் வழங்கும் திட்டம், நிலம் மேம்பாட்டுத்திட்டம், தொழில்முனைவோர் மேம்பாட்டுத்திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான சுழல் நிதி மற்றும் பொருளாதார கடனுதவி வழங்கும் திட்டம் என பல்வேறு திட்டங்கள் தமிழக அரசால் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில், தாட்கோ மூலம் தென்காசி மாவட்டத்தில் 2019-2020-ம் நிதியாண்டு செயல் திட்டத்தின் கீழ் இந்து ஆதி திராவிடர்களுக்கு இலவச தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குவதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதன் அடிப்படையில் ஆதி திராவிட மாணவ மாணவிகளுக்கு தங்கம் தர நிர்ணயம் மற்றும் விலை நிர்ணயம் குறித்த பயிற்சி 20 மாணவர்களுக்கு 30 நாட்களும், ஆயத்த ஆடைகளில் டிசைனிங் பயிற்சி 20 மாணவர்களுக்கு 63 நாட்களும், சுய வேலைவாய்ப்புக்கான தையல் பயிற்சி 20 மாணவர்களுக்கு 43 நாட்களும் ஆக மொத்தம் 60 ஆதிதிராவிட மாணவ மாணவிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு அரசு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு கல்வி மிக இன்றியமையாததாகும். வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு திறன் மிகவும் அவசியமாகும். எனவே இப்பயிற்சியில் கலந்து கொண்டுள்ள மாணவ மாணவிகள் இவ்வாய்ப்பினை முறையாக பயன்படுத்தி தங்களுடைய திறனை மேம்படுத்தி ஒரு தொழில் முனைவோராகவோ அல்லது பெரிய நிறுவனத்தில் வேலைவாய்ப்பை பெற்று தங்களுடைய வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கீ.சு.சமீரன் தெரிவித்தார். முன்னதாக இப்பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு பயிற்சி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தாட்கோ மாவட்ட மேலாளர் ந.வசந்தராஜன், தாட்கோ உதவி மேலாளர் முருகானந்தம், மேனேஜிங் டிரஸ்ட்டி (வேலு டிரஸ்ட்) வே.முருகன், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.