சுரண்டையில் மருத்துவ சிகிச்சைக்கு செல்ல பணம் இல்லாமல் 3 மணி நேரம் தவித்தவருக்கு பணம் கொடுத்து அனுப்பி வைத்த கிராம உதவியாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வீரகேரளம்புதூரை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் என்பவர் மகன் குமரேசன் (25 ஆட்டோ டிரைவரான இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்துள்ளது.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவரை டாக்டர் மேல் சிகிச்சைக்காக பாளை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல கூறி பரிந்துரை கடிதத்துடன் அனுப்பியுள்ளனர்.
இதனால் பேருந்தில் சென்று விடலாம் என சுமார் 6 மணியளவில் சுரண்டை பேருந்து நிலையத்திற்கு அவரின் தாய் மற்றும் தந்தையுடன் வந்த அவர் பேருந்தில் செல்வது பாதுகாப்பு இல்லாததால் 108 அவசர ஊர்திக்கு அவரது தந்தை தகவல் தெரிவித்துள்ளார்.108 அவசர ஊர்தி வர தாமதமானதால் குமரேசன் பலவீனமான நிலையில் சோர்வுடன் காணப்பட்டுள்ளார். இதனை பார்த்த அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் வீ.கே.புதூர் தாசில்தாரிடம் தகவல் தெரிவித்தனர். உடனடியாக கிராம உதவியாளர் கணபதி (எ) கணேசனை சம்பவ இடத்திற்கு அனுப்பி நோயாளியை பத்திரமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க கேட்டுக்கொண்டு 108 அவசர ஊர்திக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இரவு 9 மணி வரை 108 ஆம்புலன்ஸ் வராததால் கிராம உதவியாளர் கணபதி (எ) கணேசன், காவலர் சமுத்திரக்கனி உதவியுடன் தனது சொந்த செலவில் வாடகை காரை ஏற்பாடு செய்து அதற்கான வாடகையையும் அவசர மருத்துவ செலவுக்காக பணமும் கொடுத்து அனுப்பி வைத்தார்.நோயாளியின் கஷ்டத்தை கண்டு மனிதாபிமானத்துடன் விரைவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த கிராம உதவியாளர் கணபதி எ கணேசனை பொதுமக்கள் பாராட்டினர்.எனினும், தகவல் தெரிவிக்கப்பட்டு 2 மணி நேரம் கழித்து நோயாளி வாடகை காரில் சென்ற பின்னரே 108 அவசர ஊர்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.