கீழக்கரையில் தொடர்ந்து நாய்களால் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்பட்டு வருவது வாடிக்கையாகி விட்டது. நாய்கள் கடியால் கீழக்கரை அரசு மருத்துவமனையில் தினமும் 10க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உள் மற்றும் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நாய் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடக்கு கிளை சார்பாக சமூக அமைப்புகளை ஒருங்கிணைப்பு செய்து ஆலோசனை செய்ய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடக்கு கிளை தலைவர் கண்மணி சீனி அழைப்பு விடுத்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து இன்று (28/10/2019) இரவு 8.30 மணியளவில் வடக்கு கிளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மர்கஸில் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் வரும் 30 ம்தேதி சமூக அமைப்புகள் சார்பாக நகராட்சி நிர்வாகத்தில் நாய்களை அகற்ற மனு செய்வது என்றும் இது சம்பந்தமாக பல முறை மனு அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளாததால் 30 ம்தேதி அளிக்கும் மனு மீது நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாத பட்சத்தில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சமூக அமைப்புகள் மற்றும் ஊர் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவது என்றும், கீழக்கரை நகராட்சியில் முக்கிய முடிவுகளை எடுத்து செயல்படுத்த நிரந்தர ஆணையரை நியமிக்க சமூக அமைப்புகள் சார்பாக தமிழக முதல்வர் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு உயர் அதிகாரிகளுக்கு மனு செய்வது என்றும் ,முடிவு செய்யப்பட்டது.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் கீழக்கரை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடக்கு கிளை,தெற்கு கிளை, கிழக்கு கிளை நிர்வாகிகள், கீழக்கரை S D P I கட்சி நிர்வாகிகள், மக்கள் நல பாதுகாப்புக்கழக நிர்வாகிகள், சட்ட விழிப்புணர்வு இயக்க நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.