மதுரை மாவட்டம் கப்பலுார் சிட்கோ தொழிற்பேட்டையில் மர்ம நபர்கள் லாரியில் கொண்டு வந்த மருத்துவ கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி தீ வைத்ததால், புகை மண்டலம் சூழும் நிலை தொடர்ந்த வண்ணம் உள்ளது.
இன்று 13/11/2020 அதிகாலை லாரியில் மருத்துவ கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகளை கொண்டு வந்த மர்ம நபர்கள் கப்பலூர் தொழிற்பேட்டையின் பின்புறம் ரயில்வே கேட் அருகே கொட்டி தீ வைத்துள்ளனர். இதனால் ந பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து சுமார் 100 மீட்டர் உயரத்திற்கு மேல் எழுந்த புகையால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
மருத்துவ கழிவுகள் எரிக்கப்பட்ட இடத்தில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனம் நிறுவனங்களுக்கு சொந்தமான கோடிக்கணக்கான லிட்டர் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், மற்றும் காஸ் சேமித்து வைக்கும் சேமிப்பு கிடங்குகள் உள்ளது.
இதையடுத்து டி.எஸ்.பி., வினோதினி, இன்ஸ்பெக்டர் முத்து, தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயராணி மற்றும் தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மருத்துவ கழிவுகளில் இருந்து வந்த புகையால் தீயணைப்பு வீரர்கள் அருகில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து… சமூக ஆர்வலர் வடிவேலன் கூறுகையில், “கேரள பகுதிகளில் இருந்து மருத்துவ கழிவுகள் கொண்டு வரப்பட்டு தமிழக பகுதிகளில் கொட்டி செல்லும் சம்பவங்கள் நடந்து வந்த நிலையில் தற்போது, மதுரையில் மருத்துவ கழிவுகள் கொட்டி எரிக்கப்பட்டுள்ளன. இதனால் நீர்வளம் பாதிக்கப்படுவதுடன் சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்படுகிறது.. எனவே லாரியில் மருத்துவ கழிவுகளை கொண்டு வந்தவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்”
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.