விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆவரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பால்பாண்டி (30). இவர் டெல்லி மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி மணிமேகலை (27), சென்னை அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். கணவன், மனைவி இருவரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தனர். நேற்று பால்பாண்டியும், மணிமேகலையும் ராஜபாளையம் அருகில் உள்ள பேயம்பட்டி குலதெய்வம் கோவிலுக்கு, இருசக்கர வாகனத்தில் சென்று சாமி கும்பிட்டுவிட்டு, ஆவரம்பட்டிக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். பி.எஸ்.கே நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த மினி வேன் ஒன்று இருசக்கர வாகனத்தில் மோதியது. இந்த விபத்தில் காவலர் பால்பாண்டி பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், பால்பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். பால்பாண்டி மனைவி மணிமேகலை, பலத்த காயங்களுடன் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து ராஜபாளையம் தெற்கு காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து, மினி வேன் ஓட்டுனர் நரிமேடு பகுதியைச் சேர்ந்த, கஜேந்திரன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.