மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குறவன்குளம் கிராமத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி அதிகாலை கண்ணம்மாள் (29) என்ற பெண் வீட்டின் அருகே தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். தகவலறிந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து தலைமறைவாக இருந்த அப்பெண்ணின் கணவர் வேங்கையனை (36) தீவிரமாக தேடி வந்தனர். அவர் ஏற்கனவே சென்னையில் வேலை பார்த்து வந்தவர் என்பதால் தனிப்படை போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் கொலை நடந்தது 22 நாட்களுக்கு பின் அலங்காநல்லூர் அருகே அய்யூர் பிரிவு பகுதியில் தலைமறைவாக இருந்த வேங்கையனை அலங்காநல்லூர் காவல் ஆய்வாளர் சங்கர் கண்ணன் தலைமையிலான போலீசார் இன்று கைது செய்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் மனைவி கண்ணம்மாள் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டு கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று அதிகாலை இருவருக்கும் வாய்த்தகராறு முற்றவே இந்த கொலை நடந்ததாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து அலங்காநல்லூர் போலீசார் வேங்கையனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடந்து 22 நாட்களுக்கு பின் கொலையாளி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.