அரசு புறம்போக்கு நிலத்தில் குவாரி செயல்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் முறையாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவும் உரிய அபராதத் தொகை விதித்து அந்த பணம் அரசின் கணக்கில் செலுத்தவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.மதுரை மாவட்டம் கப்பலூர் சேர்ந்த ராமன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எங்கள் குடியிருப்பு பகுதியில் கிரஷர் மற்றும் எம்.சாண்ட் தயாரிப்பு நிறுவனம், கல்குவாரியும் செயல்படுகிறது. இவர்கள் இதன் அருகிலுள்ள 90 சென்ட் அரசு புறம்போக்கு நிலத்தையும் ஆக்கிரமித்துள்ளனர்.இந்த நிலத்தை தான் விவசாய பணியின் போது களமாக இப்பகுதி மக்கள் பயன்படுத்தினோம். தற்போது குவாரி மற்றும் கிரஷரால் அருகிலுள்ள பள்ளி கட்டிடமும், விவசாய நிலங்களும், வீடுகளும் பாதிக்கின்றன. இங்கிருந்து வெளியேறும் தூசி கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.இதன் அருகில் காஸ் நிரப்பும் மையமும் பாதுகாப்பின்றி உள்ளது. அதிகளவிலான லாரிகள் அடிக்கடி வந்து செல்வதால் எப்போதும் அச்சத்துடனே இருக்க வேண்டியுள்ளது புதிதாக யாரும் வீடு கட்ட முடியவில்லை.எனவே, கிரஷர் மற்றும் எம்.சாண்ட் நிறுவனம் செயல்பட தடை விதிக்க வேண்டும். அரசு புறம்போக்கு நிலத்தில் குவாரி நடத்தியதற்காக சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கவும், வேறு இடத்தில் களம் அமைத்து தரவும் உத்தரவிட வேண்டும். என மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுக்களை விசாரணை செய்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: கிரஷர் மற்றும் எம்.சாண்ட் நிறுவனத்திற்கு வழங்கிய உரிமம் ரத்து செய்யப்படுகிறது. சம்பந்தப்பட்ட நிலத்தில் இவை செயல்படக் கூடாது. அதிகாரிகளின் அனுமதியுடன் அங்குள்ள இயந்திரங்களை மனுதாரர் எடுத்துக் கொள்ளலாம். அரசு புறம்போக்கு நிலத்தில் குவாரி செயல்பட்டது குறித்து அதிகாரிகள் முறையாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேற்கொள்ளப்படும் நடவடிக்கை முடியும் வரையிலும், அபராதத் தொகை விதிக்கப்பட்டு அந்த பணம் அரசின் கணக்கில் முழுமையாக செலுத்தப்படும் வரை குழு அமைத்து மாவட்ட ஆட்சியர் கண்காணிக்க வேண்டும். என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். கப்பலூர் எம் சாண்ட் நிறுவனத்தின் உரிமம் ரத்து : உயர்நீதி மன்றம்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.