மதுரை கூடல் புதூர் பொதிகை நகர் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி தான் குடியிருந்து வரும் வீட்டில் கழிவறையில் மயங்கிய நிலையில் சிறுமியின் உறவினர்களால் நேற்று மீட்கப்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சிறுமி உயிரிழந்ததை தொடர்ந்து சந்தேக மரணம் என போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்க கூடும் என்கின்ற சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று சிறுமியின் வீட்டில் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் போலீசார் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே சிறுமியின் பிரேத பரிசோதனை சற்று நேரத்துக்கு முன்பு நிறைவு பெற்றது. இந்த பிரேத பரிசோதனையில் முதற்கட்டமாக சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் கூறியதாவது;
சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதை போக்சோ மற்றும் கொலை வழக்காகவும் மாற்றப்படும். குற்றவாளியை நெருங்கி விட்டதாகவும் விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார் என்றும் தெரிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன் புதுச்சேரியில் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் அதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளதை அடுத்து பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.