மதுரை அவனியாபுரத்தில் விமான நிலையம் செல்லும் பிரதான சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட காய்கறி வார சந்தையால் போக்குவரத்து நெரிசல்; வாகன ஓட்டிகள் அவதி..
மதுரை திருப்பரங்குன்றம் தாலுக்கா அவனியாபுரத்தில் அனுமதி இன்றி வைக்கப்பட்ட காய்கறி வார சந்தையால் அவனியாபுரம் விமான நிலையம் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து அவனியாபுரம் தினசரி காய்கறி சந்தை வியாபாரிகள் கூறிய போது, அவனியாபுரத்தில் மாநகராட்சி நிர்வாகம் மூலம் 100க்கும் மேற்பட்ட கடைகள் கட்டிக் கொடுக்கப்பட்டு இதில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் வியாபாரம் செய்து வருகிறோம். எங்களிடம் மாநகராட்சி நிர்வாகம் தினசரி இருபது ரூபாய் வாடகை பெற்று வருகின்ற நிலையில், தற்போது தனிநபர் சொந்த வருமானத்திற்காக அவனியாபுரம் விமான நிலையம் செல்லும் பிரதான நெடுஞ்சாலையில் 8 மாதங்களாக வார சந்தை என்ற பெயரில் கடை ஒன்றுக்கு நூறு ரூபாய் வசூல் செய்து வருகின்றனர். இதனால் எங்களுக்கு வியாபாரங்கள் பாதிக்கப்படுகிறது என குற்றம் சாட்டினர்.
அவனியாபுரம் தினசரி காய்கறி சந்தையில் ஒரு நாளைக்கு 2000 ரூபாய்க்கு வியாபாரம் செய்து எங்களது கடன் மற்றும் குழந்தைகளுக்கு பள்ளி கட்டணம் உள்ளிட்டவைகளை கட்டி வந்த நிலையில், தற்போது வார சந்தை இயங்கப்பட்டு வருவதால் மூன்று நாளைக்கு ஒரு முறை தான் 2000 ரூபாய்க்கு வியாபாரம் செய்வதாகவும், இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினர். இது குறித்து மாநகராட்சி ஆணையாளர், காவல் நிலையம், மாவட்ட ஆட்சியர் மற்றும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மதுரை மேயரிடமும் மனு கொடுத்தோம். எங்களுக்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.