
திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், தில்லையேந்தல் ஊராட்சியின் கீழ் இயங்கி வருகிறது கும்பிடுமதுரை தொடக்கப்பள்ளி. மற்ற தொடக்கப்பள்ளிகளை போல் இருக்கும் என்று உள்ளே செல்பவர்களுக்கு பல ஆச்சரியங்கள் காத்திருக்கும்.
இங்கு படிக்கும் சிறுவர், சிறுமியர்கள் ஆங்கில புலமையில் தனியார் பள்ளிக்கு நிகராக விளங்குகிறார்கள். கவிதைகள் கூறுவதில் தமிழ் கவிஞர்களையும் மிஞ்சிவிடுகிறார்கள். விஞ்ஞான அறிவுத்திறனையும் நிரூபிக்கும் வண்ணம் சமீபத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் நடத்தப்பட்ட அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசை வென்றது குறிப்பிடத்தக்கது. இப்பள்ளி சுற்றுபுறசூழல் அமைப்பிலும் உறுப்பினராக இருந்து பங்களிப்பு செய்வதும் பாராட்டக்குரிய செயல்பாடாகும்.
ஆனால் இப்பள்ளியின் வளர்ச்சியின் தேய்மானத்தைப் பற்றி பள்ளயின் தலைமை ஆசிரியர் முகம்மது இபுராஹிம் மற்றும் துணை ஆசிரியை சாபிஹா ஆகியோர் கூறியது, மனதில் மிக ஆழமான வலியை உண்டாக்குகிறது. அவர்கள் கூறுகையில் இப்பள்ளி 89களில் ஆரம்பிக்கப்பட்ட பொழுது 60க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டதாக இருந்தது.
அந்த காலகட்டத்தில் கீழக்கரையைச் சார்ந்த ஒரு அறக்கட்டளை சார்பாக நிரந்தர கட்டிடமும் கட்டி தரப்பட்டது, ஆனால் இன்று சரியாக பராமரிக்கபடாமல் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இன்று வெறும் 27 மாணவர்களுடன் 5 வகுப்பு மாணவர்களும் ஓரே அறையில் வைத்து பாடம் எடுக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். அதே சமயம் இங்கு தொடக்க கல்வியை நிறைவு செய்து விட்டு செல்லும் மாணவர்கள் மேன்நிலைப் பள்ளிகளில் முதலிடம் வகிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.
இதைப்பற்றி தொடர்ந்து துணை தலைமை ஆசிரியை தொடர்ந்து கூறுகையில், அரசு இப்பொழுது நவீன முறையில் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்க அனைத்து விதமான கருவிகளும் தருவதோடு நில்லாமல் அரசுப் பள்ளி ஆசிரிய, ஆசிரயைகளுக்கும் தொடர் பயிற்சியும் வழங்குகிறார்கள். ஆனால் இங்கு கும்பிடுமதுரையில் என்றோ நடந்த சில சம்பவங்களை மனதில் வைத்துக் கொண்டு சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமத்து மக்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிக்கு அனுப்புவதில்லை என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் இங்கு எத்தனையோ குடும்பத்தினர் தனியார் பள்ளயிக்கு அனுப்புவதற்காக கடன் வாங்கி சிரமத்துக்கு ஆளாகும் நபர்களைப் பார்க்கும் போது மிகவும் வேதனையளிக்கிறது என்றார்.
பின்குறிப்பு:- விரைவில் கீழைநியூஸ் டிவியில் இப்பள்ளியைப் பற்றிய விரிவான சிறப்பு பார்வை..
You must be logged in to post a comment.