பிரதமர் மோடியுடனான ஆலோசனையின்போது, ஒடிசா, மேகாலயா, இமாச்சலபிரதேச முதலமைச்சர்களை தவிர்த்து, மற்ற 6 மாநில முதலமைச்சர்களும் ஊரடங்கை தளர்த்த விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மார்ச் 20ஆம் தேதிக்குப் பிறகு 4ஆவது முறையாகவும், ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு மூன்றாவது முறையாகவும் முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.
ஊரடங்கை தளர்த்துவது தொடர்பாக இதில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதில், மேகாலயா, மிமோரம், புதுச்சேரி, உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், ஒடிசா, பீகார், குஜராத், ஹரியானா ஆகிய 9 மாநிலங்களின் முதலமைச்சர்கள் தங்கள் கருத்துகளையும், தேவைகளையும் எடுத்துரைத்தனர்.
மற்ற முதலமைச்சர்கள் தங்களது கருத்துகளையும் பரிந்துரைகளையும் பிரதமருக்கு எழுத்து வடிவில் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது. இதில் மேகாலயாவில் மே 3ஆம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கை நீட்டிக்க உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் கான்ராட் சங்மா தெரிவித்தார்.
அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து, மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து தடை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மிசோராமில் ஊரடங்கை கடுமையாகக் கடைப்பிடித்து வருவதாகவும், மத்திய அரசின் உத்தரவுகள் தொடர்ந்து பின்பற்றப்படும் என்றும் அம்மாநில முதலமைச்சர் Zoramthanga தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு தலையிட்டு, புதுச்சேரியில் மருத்துவ கருவிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் போதிய அளவில் கிடைக்கச் செய்ய வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். ஊரடங்குக்குப் பின்னர் தொழிற்சாலைகள் திறக்கவும், மாநிலத்திற்கு நிதியுதவி மற்றும் கொரோனா தடுப்பு மானியங்களை வழங்குமாறும் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தொழில், வர்த்தக நடவடிக்கைகள் படிப்படியாக தொடங்கப்பட வேண்டும் என்று உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேணி சிங் ராவத் தெரிவித்துள்ளார்.
பொருளாதார செயல்பாடுகளை தொடங்க இமாச்சலப் பிரதேசம் தயாராக உள்ளதாகவும், ஊரடங்கு குறித்து பிற மாநிலங்களோடு கலந்தாலோசித்து, அவர்கள் கூறுவதையும் கருத்தில் கொண்டே முடிவு செய்யப்பட வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் தெரிவித்தார்.
நாடு தழுவிய ஊரடங்கு தொடர வேண்டும் என்றும், அதேசமயம், முக்கியமான செயல்பாடுகள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் வலியுறுத்தினார். பொருளாதார செயல்பாடுகளை மாநிலங்களுக்குள் மட்டும் அனுமதிக்க வேண்டும் என அவர் கூறினார்.
You must be logged in to post a comment.