கோயம்பேடா? கிளாம்பாக்கமா? – அய்யோ தலை சுத்துதே:எங்கு பஸ் ஏறுவது? குழப்பத்தில் பயணிகள்..
விரைவு போக்குவரத்து கழகபேருந்துகள் இயக்கம் தொடர்பாக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் கோயம்பேடு, தாம்பரம், பெருங்களத்தூர் ஆகியபகுதிகளில் இருந்து பயணிக்கும் வகையில் முன்பதிவு செய்தவர்கள் கிளாம்பாக்கம் சென்று பயணிக்கவேண்டும். கோயம்பேட்டில் பயணிக்க முன்பதிவு செய்த நேரத்தில், கிளாம்பாக்கத்தில் இருந்து இந்த பேருந்துகள் புறப்படும்.
முன்பதிவு செய்த பயணிகளுக்கான விரைவு பேருந்துகள் மட்டுமே கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. அதே நேரம், திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் (விழுப்புரம், திருச்சி மார்க்கம்) விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி போக்குவரத்து கழக பேருந்துகளில் (மூன்றுக்கு இரண்டு இருக்கை (3X2) கொண்டவை) பயணிக்க முன்பதிவு செய்திருப்போரும், முன்பதிவு செய்யாத பயணிகளும், விழுப்புரம், திருச்சி, மதுரை மார்க்கமாக தென்மாவட்டங்களுக்கு பயணிக்க இருப்போரும் கோயம்பேட்டுக்கு வர வேண்டும்.
கும்பகோணம் வழியாக என்எச்45 தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்தும், கும்பகோணம் போக்குவரத்து கழக பேருந்துகள் (3X2 இருக்கை) தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்தில் இருந்தும், ஈசிஆர் வழியாக செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்தும் இயக்கப்படுகின்றன.
You must be logged in to post a comment.