Home செய்திகள் இயற்கை விவசாயத்தில் ‘மண் தான் வாத்தியார்’!-ஈஷாவின் 3 மாத களப் பயிற்சியில் விவசாயி வள்ளுவன் சிறப்புரை..

இயற்கை விவசாயத்தில் ‘மண் தான் வாத்தியார்’!-ஈஷாவின் 3 மாத களப் பயிற்சியில் விவசாயி வள்ளுவன் சிறப்புரை..

by syed abdulla

இயற்கை விவசாயத்தில் ‘மண் தான் வாத்தியார்’!-ஈஷாவின் 3 மாத களப் பயிற்சியில் விவசாயி வள்ளுவன் சிறப்புரை..

மண் காப்போம் இயக்கத்தின் 3 மாத இலவச இயற்கை விவசாய களப் பயிற்சியின் நிறைவு விழா கோவையில் இன்று (மார்ச் 31) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பொள்ளாச்சியைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி வள்ளுவன்  ‘இயற்கை விவசாயத்தை கற்றுக்கொள்ள விரும்பும் இளைஞர்கள் மண்ணை அதிகம் கவனிக்க வேண்டும். என்னை போன்ற முன்னோடி விவசாயிகளும், வேளாண் பயிற்சியாளர்களும் கற்றுக்கொடுப்பதை விட அதிகமான விஷயங்களை மண் உங்களுக்கு கற்றுக்கொடுக்கும். என்னை பொறுத்தவரை இயற்கை விவசாயத்தில் ‘மண் தான் வாத்தியார்’ என கூறினார்.

அழிந்து வரும் மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் உலகளவில் பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவை செம்மேட்டில் உள்ள அந்த இயக்கத்தின் 35 ஏக்கர் மாதிரி இயற்கை விவசாய பண்ணையில் 3 மாத இலவச களப் பயிற்சியையும் நடத்தி வருகிறது.

இந்த 3 மாத களப் பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு மாடுகளை கையாள்வது, இயற்கை இடுப்பொருட்கள் தயாரிப்பது, விவசாய இயந்திரங்களை பயன்படுத்துவது, விதைகளை விதைப்பது முதல் அறுவடை செய்து விற்பனை செய்வது வரையிலான பல்வேறு அம்சங்கள் குறித்து கற்றுகொடுக்கப்படுகிறது.

அந்த வகையில், ஜனவரி 1-ம் தேதி தொடங்கிய 4-வது குழுவினருக்கான பயிற்சியின் நிறைவு விழா செம்மேடு பண்ணையில் இன்று நடைபெற்றது. இதில் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களுக்கு மண் காப்போம் இயக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா அவர்கள் சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்து கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது, சென்னையைச் சேர்ந்த திரு. ஆனந்த் அவர்கள் கூறுகையில், ‘நான் ஐ.டி துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தேன். அதன் பின்னர் அதில் இருந்து விலகி சில ஆண்டுகள் சொந்தமாக விவசாயம் செய்து வந்தேன். என்னுடைய குடும்பத்தில் நான் தான் முதல் தலைமுறை விவசாயி என்பதால் விவசாயம் சார்ந்த அனைத்து விஷயங்களையும் நானே சொந்தமாக தேடி தேடி கற்றுக்கொள்ள வேண்டி இருந்தது.

முன் அனுபவமோ, முறையான பயிற்சியோ இல்லாததால் என்னுடைய நேரமும், பணமும் அதிகம் விரயமானது. ஒருகட்டத்தில் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் என்னால் விவசாயத்தை தொடர முடியவில்லை. எனவே கொரோனா காலத்தில் என்னுடைய நிலத்தை விற்றுவிட்டேன். இருந்தாலும், இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் நீங்கவில்லை. இதன்காரணமாக, ஈஷாவின் பயிற்சியில் கலந்துகொண்டேன். நான் இங்கு தங்கியிருந்த 3 மாதங்களில் ஏராளமான புது விஷயங்களை கற்றுக்கொண்டேன்.

உழவில்லா விவசாயம், பல பயிர் சாகுபடி முறை போன்ற அம்சங்களை அவர்கள் இங்கு வெற்றிகரமாக செய்து வருகிறார்கள். அதில் இருந்து கிடைத்த அனுபவத்தை கொண்டு நான் புதிதாக வாங்கியுள்ள இரண்டரை ஏக்கர் நிலத்தில் காய்கறி விவசாயத்தை நான் மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளேன். இந்த முறை அதில் நிச்சயம் வெற்றி பெறுவேன்” என மிகுந்த நம்பிக்கையுடன் கூறினார்.

இதேபோல், எம்.ஏ. எக்கானமிக்ஸ் பட்டாதிரியான  வைரமுத்து கூறுகையில், “மைக்ரோ பினான்ஸ் கம்பேனி, கார் ஷோரூம் ஆகிய இடங்களில் வேலை பார்த்த எனக்கு இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் இருந்தது. அதனால், இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டேன். எனக்கு சொந்தமாக நிலம் இல்லாததாலும், பொருளாதார தேவைகள் இருப்பதாலும், வேலைவாய்ப்பை எதிர்பார்த்து தான் இந்தப் பயிற்சிக்கு வந்தேன். என்னுடைய நோக்கம் பூர்த்தி அடையும் விதமாக, பயிற்சிக்கு பிறகு ஒரு பண்ணையில் எனக்கு வேலை வாங்கி தரும் பணியையும் ஈஷா செய்து தந்துள்ளது. 3 மாதங்களுக்கு உணவும், தங்குவதற்கு இடமும் இலவசமாக வழங்கிய ஈஷா தற்போது எனக்கு வேலைவாய்ப்பும் அளித்துள்ளதற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.

செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com