இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -3
கப்ளிசேட்
உஸ்மானிய பேரரசு -11
(கி.பி.1299-1922)
கோசோ போரில் இளவரசர் பயாசித் அதிரடியான வியூகங்களை வகுத்தார்.
உஸ்மானிய படைகளை பின்புறமாக நகர்த்தியும், இருபக்கவாட்டு பகுதிகளிலும் மிகவேகமாக பின்னடைய வைத்தும் அரை நிலவு போன்ற அமைப்பை ஏற்படுத்தினார்.
அதனால் நடுப்பகுதியில் திடீரென ஏற்பட்ட வெற்றிடத்தில், இளவரசர் பயாசித்தின் வியூகத்தை அறியாமல் மளமளவென நடுப்பகுதியில் பால்கன் கூட்டணி படை புகுந்தது.
உஸ்மானிய ராணுவத்தின் வலுவான ஒவ்வொரு குதிரையின் முன்புறம் ஒரு வீரனும் பின்புறம் ஒரு வீரனுமாக அமர்ந்து முன் அமர்ந்துள்ள வீரன் ஒருகையில் குதிரையின் சேணத்தையும்,
மற்றொரு கையில் கையெறி குண்டுகளையும் பின்னால் அமர்ந்துள்ள வீரன் துப்பாக்கி போன்ற நெருப்பு தோட்டாக்களை உமிழும் ஆயுதத்தை கையில் ஏந்தியும்,
ஆயிரம் குதிரைப்படை வீரர்கள் இதுபோல் தயாராக அணிவகுத்து திடீரென நடுவிலிருந்த பால்கன் படை மீது,
ஒரே நேரத்தில் பாய்ந்து கையெறி குண்டுகளை வீசினார்கள். துப்பாக்கி போன்ற ஆயுதத்தால் தோட்டாக்களை நெருப்பு பொறிகளோடு வீசினார்கள்.
இந்த திடீர் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறிய பால்கன் படைகள் நெருப்புகளால் சுடப்பட்டு வீழ்ந்தார்கள்.
ஆகவே அலறி அடித்து திரும்பி பால்கன் வீரர்கள் ஓடினார்கள். ஓடியவீரர்களை விரட்டாமல் இளவரசர் பயாசித் தப்பிக்க விட்டார்.
இந்த அற்புதமான அதிரடி வியூகங்களை வகுத்ததால் இளவரசர் பயாசித்திற்கு இடி, மின்னல் என்பதைக் குறிக்கும் பட்டம் வழங்கப்பட்டது.
செர்பிய படைகளுடன் நடந்த யுத்தத்தில் பேரரசர் முராத் நேரிடையாக கலந்து கொண்டார். பேரரசரே கலந்து கொண்டதால் வீரர்கள் மிக மகிழ்ச்சியுடன் போரிட்டனர். எளிதாக வெற்றியும் பெற்றனர்.
இளவரசர் பயாசித்தின் போர் வியூகங்களை நேரிடையாக கண்ட மன்னர் முராத் மிக்க மகிழ்ச்சியுடன் தனது மகனை தழுவிக் கொண்டார்.
காயமடைந்த செர்பியா வீரர்களுக்கு மருத்துவ உதவிகளை மன்னர் முராத் அவர்களே நேரிடையாக செய்தார்.
எதிரிகளின் வீரர்கள் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருந்த அந்த முகாமை சுற்றி வந்தார்.
எல்லா வீரர்களுக்கும் உடைகளும், தரமான உணவுகளும் வழங்க ஆணையிட்டார். எல்லாவற்றையும் தானே மேற்பார்வை செய்தார்.
இறைச்சிந்தனை மிகுந்த மன்னர் முராத் ஏழைகளுக்கு நிறைய தர்மங்கள் செய்தார்.
தனது ஆட்சியின் மூலம் உஸ்மானிய பேரரசு உலகம் முழுவதும் பரவ வேண்டும் என்று பேராவல் கொண்டார்.
அதற்கான சிறப்பான அடித்தளங்களை பேரரசு முழுவதும் முராத் அமைத்தார்.
தனது மகன் பயாசித்தையும் அதுபோன்றே சிறப்பான மனநிலையில் உருவாக்கினார்.
65 வயதை கடந்திருந்த பேரரசர் முராத் கொஞ்சம் தளர்ந்து இருந்தார்.
இருப்பினும் இதுபோன்று ஏழைகளுக்கும் போர் கைதிகளுக்கும் தனது கையாலேயே உணவு கொடுப்பதை மிகவும் விரும்பினார்.
அதுபோன்று அன்றும் பகல் உணவை கைதிகள் முகாமில் ஒவ்வொருவருக்கும் வழங்கி வந்த போது அந்த கொடுமையான விபரீதம் நிகழ்ந்தே விட்டது.
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
You must be logged in to post a comment.