கஞ்சா கடத்தல் வழக்கில் மே 22 ஆம் தேதி வரை சவுக்கு சங்கரை நீதிமன்ற காவலில் வைக்க மதுரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள், பெண் போலீசார் குறித்துஅவதூறாக பேசிய வழக்கில் கடந்த 4-ஆம் தேதி தேனி மாவட்டத்தில் கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அந்த கைது நடவடிக்கையின் போது கஞ்சா வைத்திருந்ததாக சங்கர் உள்ளிட்ட மூவர் மீது தேனி பழனி செட்டிபட்டி போலீஸார் வழக்கு பதிந்தனர்.
அந்த வழக்கில் சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக கோவையிலிருந்து, பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி செங்கமலச்செல்வன் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையின் போது,
கோவை சிறையில் 10 காவலர்கள் சேர்ந்து தன்னை தாக்கியதாகவும், கோவை சிறையில் தனக்கு பாதுகாப்பில்லை என்றும் கூறினார். தனது பாதுகாப்பிற்காக மதுரை சிறைக்கு தன்னை மாற்றுமாறு சவுக்கு சங்கர் கோரிக்கை விடுத்தார். அதற்கு பதிலளித்த நீதிபதி,
வேறு சிறைக்கு மாற்றுவதற்கு எனக்கு அதிகாரம் இல்லை. ஆகவே சிறைத்துறைக்கு கடிதம் மூலமாக கோரிக்கை விடுத்து பரிகாரம் தேடிக் கொள்ளுங்கள் என கூறினார்.
பின்னர் இந்த வழக்கில் சவுக்கு சங்கரை மே 22 வரை காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்ற விசாரணை முடிவடைந்த்தை அடுத்து, சவுக்கு சங்கரை கோவை சிறைக்கு கொண்டு செல்ல காவல்துறையினர் அவரை அழைத்து வந்துள்ளனர். அப்போது நீதிமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள், அவர் அழைத்து செல்லப்பட்ட வாகனத்தின் மீது துடைப்பங்களை வீசி, எறிந்து கோஷமிட்டனர்.