இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -2
கப்ளிசேட்
அப்பாஸிய பேரரசு -23
(கி.பி 750-1258)
ஜெருசலேம் என்பது ஒரு டைனமைட் போல எப்போது வெடிக்குமோ என்ற சூழலில் இன்று மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசல் நிர்வாகம் சர்வதேச ஒப்பந்தப்படி முஸ்லீம்களின் கையில் இருந்தாலும்,
சுற்றியுள்ள பகுதிகளில் இஸ்ரேலிய ராணுவம் சூழ்ந்திருக்கிறது.
ஈசா ( அலை) அவர்கள் பிறந்த “பெத்லஹேம்”நகரம்
ஜெருசலேம் அருகில் இருப்பதால் கிறிஸ்தவர்கள் தங்கள் புனித இடமாக கருதுகின்றனர்.
யூதர்களின் இறைத்தூதர்களான
நபி தாவூது (அலை) அவர்களும்,அவரது மகன் நபி சுலைமான் (அலை) அவர்களும் கட்டிய மஸ்ஜிதுல் அக்ஸாவின் வளாகமும் அதில் இடிந்திருக்கிற மேற்குச்சுவர் அவர்களின் புனிதத்தலமாகவும்
இருக்கிறது.
முஸ்லீம்களுக்கு பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் விண்னேற்றப்
பயணம் ஆரம்பித்த இடமாகவும்,
ஆரம்பகால தொழும் அடையாளமாகவும்,
முஸ்லீம்களின் மூன்று முக்கிய தலங்களில் மூன்றாவது முக்கியமான தலமாகவும் இருப்பதால் முஸ்லீம்களின் புனிதத்தலமாகிறது.
இது இஸ்லாமிய அரசின் ஆரம்பகாலங்களில் பாலஸ்தீன கிறிஸ்தவர்கள் கையில் இருந்தது.
உமர் (ரலி) அவர்களின் காலத்தில் அம்ரு இப்னு ஆஸ் (ரலி) அவர்கள் ஜெருசேலத்தை சுற்றி வளைத்தார்கள்.
அவர்களுடன் அபூ உபைதா(ரலி) காலீத் இப்னு வலீத் போன்ற முக்கிய தளபதிகளும் வந்து இணைந்து கொண்டனர்.
பாலஸ்தீன கிறிஸ்தவர்களுக்கு
அன்றைய பாரசீக பேரரசின் உதவி கிடைக்கும் என்று தோன்றாததால்,
பாலஸ்தீனை முஸ்லீம்களிடம் ஒப்படைத்து விடவும்,
தங்களின் சில பாதுகாப்பு சம்பந்தப்பட்ட சந்தேகங்களை தீர்த்து கொள்ளவும் முடிவெடுத்தனர்.
ஏனைய பல நகரங்களை முஸ்லீம்கள் வெற்றி கொண்டனர்.
எல்லா பகுதிகளிலும் மத சுதந்திரம், வழிபாட்டுத்தலங்கள்
பாதுகாப்பு, உயிர்,உடமைகள் பாதுகாப்பு என மக்கள் நிம்மதியாக இருந்தனர்.
ஆனால் ஜெருசேலம் முஸ்லீம்களுக்கும் புனித இடமாக இருப்பதால் இங்கும் அதுபோல மரியாதை கிடைக்குமா என்று சந்தேகித்து முஸ்லீம்களிடம் வாக்குறுதி பெற முடிவு செய்தனர்.
ஆகவே அபூஉபைதா (ரலி) அவர்களிடம், கிறிஸ்தவ பாதிரிகள்
கலீபாவிடமே நேரடியாக ஒப்பந்தம் செய்து கொண்டு ஆலயத்தின் சாவியையும் ஒப்படைப்போம் என்றனர்.
பாலஸ்தீனை போரின்றி ரத்தம் சிந்தாமல் வெற்றி கொள்ளவும்,
சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ளவும் கலீபா உமர்(ரலி) அவர்களுக்கு செய்தி அனுப்பப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட கலீபா அவர்கள் தனது
உதவியாளருடன்
ஒரே ஒட்டகத்தில் மதினாவிலிருந்து பயணத்தை துவங்கினார்.
மதினாவின் பொறுப்பை அலி(ரலி) அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு,
கிளம்பிய பயணத்தில் ஜெருசேலேமை அடையும் போது
பணியாளர் ஒட்டகத்தின் மீது வரும் முறையாக இருந்தது.
பணியாளர் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் பணியாளரை ஒட்டகத்தில் அமரவைத்து கயிறை பிடித்தபடி ஒட்டுப் போட்ட மேல் அங்கியுடன் ஜெருசலேத்தை கலீபா அடைந்தபோது
மிக ஆடம்பரமாக ஆடையணிந்து கலீபாவை வரவேற்க்க காத்திருந்த பாதிரியார்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
முஸ்லீம்களின் படைத்தளபதிகள்
அபூஉபைதா (ரலி),
காலித் இப்னு வலீத் (ரலி),யசீத்(ரலி) ஆகியோர் பட்டு மேலாடை அணிந்து இருந்தனர்.
சிறிய கற்களை அவர்கள் மீது எறிந்த உமர்(ரலி) அவர்கள்
இரண்டே வருடங்களில் இவ்வளவு மாற்றமா?
என கடிந்து கொண்டபோது, இந்தப் பிரதேசத்தில்
இது போன்ற ஆடைகள் அணிந்தாலே மக்கள் மதிக்கிறார்கள் என்று சமாதானம் சொல்ல அதனை உமர்(ரலி) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.
கிறிஸ்தவ பாதிரியார்களுக்கும்
கலீபா உமர்(ரலி) அவர்களுக்கும் இடையேயான ஒப்பந்தமும் ,
உமர்(ரலி ) அவர்களின் நடவடிக்கைகளும்
இன்றைய சூழலில் ஒவ்வொரு முஸ்லீமும் அறிந்து கொள்ள வேண்டும்.
அப்பாஸிய கிலாபத் வரலாறாக இந்த நிகழ்வுகள் இல்லாவிட்டாலும், சில பிற்கால நிகழ்வுகளின் விளைவுகளை அறிய இந்த வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும்.
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
You must be logged in to post a comment.