Home செய்திகள்கீழக்கரை செய்திகள் சிவகிரி அருகே கொரோனா பாதிப்பு; தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் நேரில் ஆய்வு-தடுப்பு கண்காணிப்பு பணிகள் தீவிரம்..

சிவகிரி அருகே கொரோனா பாதிப்பு; தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் நேரில் ஆய்வு-தடுப்பு கண்காணிப்பு பணிகள் தீவிரம்..

by ஆசிரியர்

தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட தேவிபட்டணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு கண்காணிப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அருண்சுந்தர் தயாளன் நேரில் ஆய்வு செய்தார்.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதி சிவகிரி அருகேயுள்ள தேவிபட்டணத்தில் கொரோனா தொற்றால் 10-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்கிராமத்தில் பெரும்பாலும் விவசாயம் சார்ந்த தொழில்களே நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தேவிபட்டணம் நேரு வடக்குத் தெருவைச் சேர்ந்த மளிகை கடை வைத்துள்ள 55 வயது பெண்ணிற்கு முதலில் கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து அத்தெரு முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறையினர், வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.

இதன் பின்னர் மளிகை கடைக்குச் சென்று வந்தவர்கள் குறித்து கணக்கெடுத்து அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் நேற்றுவரை நேரு தெரு, வடக்குத் தெரு, சிவகிரி செல்லும் மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் வசிக்கின்ற 21 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதனால் அவர்கள் வசிக்கின்ற பகுதி முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டன. இத்தெருக்களில் வசிக்கின்ற பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்றும் வெளியில் இருந்து இப்பகுதிகளுக்கு யாரும் வரவேண்டாம் என்றும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதி முழுவதும் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு அங்கு கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மேலும் இப்பகுதி பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் தன்னார்வலர்கள் மூலம் தேவைப்படுவோருக்கு வீடு தேடி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தேவிபட்டணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதாரப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் சுந்தர் தயாளன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கொரோனா தொற்று ஏற்பட்ட அனைத்து தெருக்களுக்கும் மாவட்ட ஆட்சியர் சென்று அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதாரப் பணிகள் குறித்து ஆய்வு செய்த நிலையில், அப்பகுதி பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கிறதா? என்பதனையும் மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டறிந்தார். கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் சுகாதாரப் பணியாளர்களுக்கு தேவையான அறிவுரைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கின்ற பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்றும், வெளியிடங்களில் இருந்து தேவிபட்டணத்திற்கு யாரும் செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது சங்கரன்கோவில் கோட்டாட்சித் தலைவர் முருகசெல்வி, சிவகிரி தாசில்தார் ஆனந்த், சிவகிரி பேரூராட்சி நிர்வாக அலுவலர் லெனின், வாசுதேவநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரா, வேலம்மாள், காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார், டாக்டர் தினேஷ், தலைமையில் சுகாதாரப் பணியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர் பாக்கியராஜ், ஊராட்சி செயலர் ராமராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!