இராமநாதபுரம் பகுதிகளில் இன்று (17.2.2019) மாவட்ட ஆட்சியர் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் செயல் அலுவலர் கிரேடு- 4 பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும் தேர்வு மையமான டி.டி.விநாயகர் மேல்நிலைப்பள்ளியில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்பின்பு மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்ததாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் செயல் அலுவலர் கிரேடு – 3 கிரேடு- 4 பணியிடங்களுக்கான தேர்வுகள் 16.02.2019 மற்றும் 17.02.2019 என இரண்டு தினங்களில் காலை, பிற்பகல் என தலா இரண்டு அமர்வுகளாக முறையே நடத்தப்படுகின்றன. கிரேடு- 3 தேர்வுக்கு 6 தேர்வு மையங்களும் கிரேடு – 4 தேர்வுக்கு 7 தேர்வு மையங்களும் தேர்வு செய்யப்பட்டு அமைதியான முறையில் நடத்தப்படுகிறது. தேர்வு நடவடிக்கைகளை கண்காணித்திட ஏதுவாக 7 ஆய்வு அலுவலர்களும், 7 வீடியோ கிராபர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாட்களை சம்மந்தப்பட்ட தேர்வு மையங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்ல ஏதுவாக ஆயுதம் ஏந்திய காவலர்களுடன் 2 நகர்வு குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் இத்தேர்வில் கலந்து கொள்வதற்காக கிரேடு – 3 தேர்வுக்கு 1,599 நபர்களுக்கும் கிரேடு-4 தேர்வுக்கு 1,851 நபர்களுக்கும் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டது. அந்தவகையில் நேற்று (16.02.2019) நடைபெற்ற தேர்வின் காலை அமர்வில் 843 நபர்களும், பிற்பகல் அமர்வில் 777 நபர்களும் தேர்வு எழுதினர்.
இன்றைய தினம் (17.02.2019) நடைபெறும் தேர்வின் காலை அமர்வில் 924 நபர்கள் தேர்வு எழுதினர். மாலை நடந்த தேர்வில் 952 பேர் பங்கேற்கவில்லை. தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் தேர்வறைகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் நபர்கள் தேர்வறைகளுக்கு சிரமமின்றி செல்ல ஏதுவாக கூடுதல் பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து தேர்வு மையங்களிலும் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள்களை மீண்டும் அந்தந்த தேர்வு மையங்களில் உள்ளவாறு ராமநாதபுரம் மாவட்ட கருவூலத்திற்கு பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார். ராமநாதபுரம் வருவாய் வட்டாட்சியர் பொன். கார்த்திகேயன் உடனிருந்தார்.
You must be logged in to post a comment.