உள்ளார் கிராமத்திற்கு மேற்கே உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் புள்ளி மான்களை வேட்டையாடிய இருவருக்கு வனத்துறையினர் ரூ 1 லட்சம் அபராதம் விதித்தனர். இது குறித்து வனத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் காவல் துறையினர் ஜன. 08 செவ்வாய் கிழமை இரவு 11.30 மணியளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சிவகிரி காந்தாரியம்மன் கோவில் அருகே வெகு நேரமாக சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த கார் ஒன்றினை சோதனை செய்ததில் காரின் உள்ளே மூன்று மான் கொம்புகள் இருந்தன. இந்நிலையில் சிவகிரி காவல் துறையினர் ஜன 09 காலை சுமார் 11.00 மணியளவில் சிவகிரி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து கார் மற்றும் மூன்று மான் கொம்புகள் சிவகிரி வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து சிவகிரி வனச்சரக அலுவலர் இரா. மௌனிகா தலைமையில், சிவகிரி வடக்குப்பிரிவு வனவர் அசோக்குமார், மற்றும் வனப் பணியாளர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூர் பெத்திராஜ் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கிருஷ்ணகுமார் (24), மற்றும் வாசுதேவநல்லூர் களஞ்சியம் தெருவைச் சேர்ந்த பொன்ராஜ் மகன் தியாகு (24) ஆகிய இரண்டு நபர்களும் 01.01.2024 ஆம் தேதி உள்ளார் கிராமத்திற்கு மேற்கே உள்ள பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதியில் புள்ளிமானை வேட்டையாடிய குற்றம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மான் கொம்புகள் வைத்திருந்த குற்றம் உறுதி செய்யப்பட்டு சிவகிரி வனச்சரக அலுவலகத்தில் வைத்து வனஉயிரின குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு மாவட்ட வனஅலுவலர் மற்றும் வன உயிரினக் காப்பாளர் முருகன் உத்தரவின் பேரில் நபர் 1-க்கு ரூ 50,000 வீதம் 2 நபர்களுக்கு ரூ.1,00,000 (ஒரு லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.