இராமநாதபுரம், நவ.24 – இராமநாதபுரம் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தலைமையேற்று மீனவர்களின் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் பெற்று பேசுகையில், மீனவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுரைக்கிணங்க மாதந்தோறும் மீனவர்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
இதனடிப்படையில் இன்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மீனவர்களின் முக்கிய கோரிக்கையாக முன்வைத்த கிசான் திட்டத்தில் நிலுவையில் உள்ள உதவித்தொகை பெற்றுத்தர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் பாதிக்கப்பட்ட படகுகளுக்கு உரிய இழப்பீடு தொகை மீன்வளத்துறை மூலம் தலைமை அலுவலகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உரிய நிலுவைத் தொகை விரைவில் பெற்று தரப்படும்.
தமிழ்நாடு முதலமைச்சரால் மீனவர்களுக்கான நலத்திட்டங்கள் மீன்வளத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீனவர்கள் அரசின் திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.
மத்திய அரசின் மூலம் சிறந்த கடல்வளம் மாவட்டமாக தேர்வு செய்து இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட விருது மற்றும் பாராட்டு சான்றை மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரனிடம் மீன்வளத்துறை துணை இயக்குநர் பிரபாவதி காண்பித்து வாழ்த்து பெற்றார்.
You must be logged in to post a comment.