Home செய்திகள்கீழக்கரை செய்திகள் மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்துவதாக தமிழக வேளாண்துறை செயலாளர் வாக்குறுதி…

மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்துவதாக தமிழக வேளாண்துறை செயலாளர் வாக்குறுதி…

by ஆசிரியர்

மத்திய அரசு அறிவித்துள்ள சிறு குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 சிறப்பு நிதியுதவி திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் புதிய உரிமைகள் சட்டப்படி, மாற்றுத்திறனாளிகள் இடம்பெற்றுள்ள விவசாயிகள் குடும்பத்திற்கு குறைந்தபட்சம் 25% கூடுதலாக நிதியை உயர்த்தி வழங்கவும், மொத்தப் பயனாளிகள் எண்ணிக்கையில் குறைந்தபட்சம் 5% அளவினை மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் ஒதுக்கீடு செய்யவும் நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய அரசின் விவசாயத்துறை செயலாளருக்கும், மத்திய மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் மற்றும் மத்திய மாற்றுத்திறனாளிகள் நல ஆணையருக்கும் மார்ச்-5 ஆம் தேதி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

எனினும், இது குறித்து மத்திய அரசிடமிருந்து சாதகமான எந்த பதிலும் எமது சங்கத்திற்கு கிடைக்கப் பெறவில்லை. தமிழகத்தில் இத்திட்டத்தின்கீழ் பயனாளிகளை கண்டறிந்து நடைமுறைப்படுத்தும் விதமாக வேளாண் துறை சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் அரசாணை எண்.42 வெளியிடப்பட்டிருந்தது. அதிலும், மாற்றுத்திறனாளிகள் சட்ட விதிகள் கடைப் பிடிக்கப்படவில்லை.

எனவே, இது குறித்து தமிழக வேளாண்துறை செயலாளரை சந்தித்து முறையிட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் முடிவு செய்திருந்தது.

அந்த அடிப்படையில் இன்று வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி அவர்களை சென்னை தலைமை செயலகத்தில் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.நம்புராஜன், மாநில துணை தலைவர் எஸ்.சண்முகம், மாநில செயலாளர் பி.ஜீவா, மாநில துணை செயலாளர் எஸ்.கே.மாரியப்பன், மாநிலக்குழு உறுப்பினர் கே.முருகன் ஆகியோரைக் கொண்ட குழு நேரில் சந்தித்து முறையிட்டது.

மனுவை பெற்றுக்கொண்டு, கோரிக்கையையும் கவனமாக கேட்டறிந்த தமிழக வேலாண்துறை செயலாளர், கோரிக்கைகள் நியாயமானது தான் என்றும், இது குறித்து மத்திய அரசுக்கு எடுத்துச்சொல்லி, தேர்தல் நடத்தை விதிகள் காலாவதியான பின்னர் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்துவதாகவும் வாக்குறுதி அளித்தார்.

இத்தகவல் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்,தமிழ் மாநிலக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் :-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!