இராமநாதபுரம் நாடாளுமன்ற மக்களவை தொகுதி திமுக தலைமையிலான மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் கா.நவாஸ் கனியை ஆதரித்து உச்சிப்புளியில் தேர்தல் பிரசாரம் நடந்தது.
ஆர்.விஸ்வநாதன் ஏற்பாட்டில் நடந்த பிரசாரத்தில் முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசியதாவது: ஜாதி, மத பேதமின்றி தேசிய ஒருமைப்பாடு உடன் வாழும் இந்திய மக்களை மதத்தின் பெயரால் பாஜக., துண்டாட சூழ்ச்சி வலை விரித்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகள் எதையும் மோடி அரசு நிறைவேற்ற வில்லை. பாஜக., வின் பொய்யான வாக்குறுதிகளை நம்ப வாக்காளர்கள் தயாரில்லை. திமுக. தலைவர் ஸ்டாலின் தலைமையிலான மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி புதுவை உள்பட 40 நாடாளுமன்ற தொகுதிகள், இடைத்தேர்தல் நடைபெறும் 22 சட்ட மன்ற தொகுதிகளை கொத்தாக வெல்லும். தமிழகத்தில் பாஜக .,விற்கென எவ்வித அடித்தளமும் இல்லை.
திராவிட கலாசாரத்தை அழிக்க நினைக்கும் பாஜக.,வை, ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள இபிஎஸ்,, ஓபி எஸ்., ஆகியோர் உயர்த்தி பிடிக்கின்றனர். பழனிசாமியையும், பன்னீர் செல்வத்தையும் வாய்க்கு வந்தபடி பேசிய, தமிழக அரசின் ஊழல்களை பட்டியலிட்டு கவர்னரிடம் புகார் மனு கொடுத்த பாமக ., அரசியல் ஆதாயங்களுக்காக தற்போது நற்சான்று வழங்கி வருகிறது. அதிமுகவை மறந்து விட்டு இபிஎஸ்., ஓபிஎஸ்., போட்டி போட்டுக் கொண்டு மோடி, அமித் ஷாவுக்கு வாழ்க கோஷமிடுகின்றனர். அமைச்சர்களுக்கு என்ன பேசுதென்றே தெரியவில்லை. வாய்க்கு வந்தபடி உளறி கொட்டுகின்றனர். அதிமுக., வில் பதவி சண்டை அதிகரித்துள்ளது. காசு கொடுத்து வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்து விடலாம் என காவி அரசியல் கூட்டம் திட்டமிட்டுள்ளது. இந்திய இறையாண்மை மீது அக்கறை கொண்டு ஒத்த கருத்துடைய அனைவரும் ஸ்டாலின் தலைமையில் ஓரணியில் திரண்டு பாசிச ஆட்சி நடத்தும் மோடியை கடுமையாக எதிர்க்கின்றனர். மதவாத மத்திய -ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், தமிழக ஊழல் ஆட்சியை அப்புறப்படுத்தவும் ஏப்.18 ல் வாக்காளர்களாகிய நீங்கள் நல்ல தீர்ப்பு அளித்தால் மே 23ல் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது மாநில கட்சிகள் அங்கம் வகிக்கும் மத்திய கூட்டாட்சி அமையும். விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்படும். நீட் தேர்வில் இருந்து மாநில கொள்கை முடிவு படி விலக்கு அளிக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நல்வாழ்வு திட்டங்கள் நிறைவேற்றப்படும் இவ்வாறு அவர் பேசினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி பேசுகையில், தொகுதி அடிப்படை பிரச்னைகளுக்கு பராபட்சமின்றி தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன். திமுக., கூட்டணி தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றுவேன், என்றார்.
திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் அஹமது தம்பி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகு, மண்டபம் ஒன்றிய திமுக செயலர் முத்துச் செல்வம், விவசாய அணி நிர்வாகி வீரபத்திரன் மற்றும் திமுக., கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
மண்டபத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் திமுக நகர் செயலர் ராஜா, மாவட்ட மீனவரணி துணை செயலர் பூவேந்திரன், மண்டபம் ஒன்றிய மீனவரணி துணை செயலர் நம்புராஜன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சம்பத் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.