இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
உலகெங்கும் உள்ள உழைக்கும் தொழிலாளர் அனைவருக்கும் தொழிலாளர் தின (மே தினம்) வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உழைக்கும் தொழிலாளர்களின் கடுமையான உழைப்பின் மூலம் நமது நாட்டில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
நாட்டின் வளர்ச்சி ஒவ்வொன்றிலும் ஏராளமான தொழிலாளர்களின் வியர்வையும், பங்களிப்பும் அடங்கியுள்ளது என்பதை மறுக்க முடியாது. தொழிலாளர்களின் எட்டு மணி நேர வேலையையும், எட்டு மணி நேர ஓய்வையும், எட்டு மணி நேர உறக்கத்தையும், தொழிலாளர் உரிமைகளையும் போராடிப் பெற்ற வெற்றியை மே தினம் நமக்கு நினைவுப்படுத்துகிறது.
தொழிலாளர் தினத்தை கொண்டாடுவதன் நோக்கம், உழைக்கும் வர்க்கத்தின் மகத்தான முயற்சியை மதிப்பதும், அவர்களின் உரிமைகளை அவர்களுக்கு தெரிவிப்பதும், உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக அவர்களை பாதுகாப்பதுமே ஆகும்.
ஆனால், தொழிலாளி வர்க்கத்தை ஒப்பந்த மயமாக்குதல், தொழிற்சங்க உரிமை பறிப்பு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக தொழிலாளர்களின் பணி நேரம் நீட்டிப்பு உள்ளிட்ட தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் தற்போது ஆளும் அரசுகளால் சன்னஞ் சன்னமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனை மட்டும் கருத்தில் கொண்டும், அந்நிய முதலீடுகளுக்கு ஏதுவாகவும் தொழிலாளர் சட்டங்களில் அரசுகள் மாற்றம் செய்து வருகின்றன.
தனியார்மயத்தை ஊக்குவிப்பதாலும், கார்ப்பரேட் நிறுவனங்களின் நடவடிக்கைகளாலும் தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதும், அவர்களுக்கு வேலை உறுதியற்ற தன்மையும் நிகழ்கிறது. இதனால் தொழிலாளிகள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.
ஆகவே, மேதினம் கொண்டாடப்படும் இத்தருணத்தில் உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தின் பணிப்பாதுகாப்பு மற்றும் அவர்களின் உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment.