Home செய்திகள்கீழக்கரை செய்திகள் டெங்கு பீதியில் கீழக்கரை – டெங்கு இப்பொழுது கீழக்கரையில் பல மடங்கு… காரணம் என்ன?? தற்காப்பது எப்படி??

டெங்கு பீதியில் கீழக்கரை – டெங்கு இப்பொழுது கீழக்கரையில் பல மடங்கு… காரணம் என்ன?? தற்காப்பது எப்படி??

by ஆசிரியர்

கீழக்கரை சுகாதரக்கேட்டின் உச்சத்தில் உள்ளது என்றே சொல்லலாம்.. எங்கு பார்த்தாலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள். வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பது போல் சில தெருக்களில் வீட்டுக்கு இரண்டு அல்லது மூன்று நபர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். முக்கியமாக 7, 8வது வார்டு பகுதிகள், பழைய குத்பா பள்ளி தெரு, வடக்குத் தெரு சங்குமால் சந்து பகுதி பொதுமக்கள் டெங்குவால் சிக்குண்டு முடங்கியுள்ளனர்.

இது பற்றி சமூக ஆர்வலரும், பாதிக்கப்பட்ட தெருவைச் சார்ந்தவருமான பரக்கத் அலி என்பவர் மிகவும் சிந்திக்க கூடிய விசயத்தை கூறுகிறார். அதாவது, அதிகமாக வெளியூரில் வசிக்கும் நபர்கள் தெருக்களில் தான் பாதிப்பு அதிகமாக உள்ளது.

காரணம் வெளியூரிலோ அல்லது வெளிநாட்டிலோ உள்ள குடும்பத்தினர் வீடுகளை அதிக நாட்கள் பூட்டிவிட்டு சென்று விடுகிறார்கள், மழைக் காலத்தில் வீட்டினுள் மழைத் தண்ணீர் தேங்கி டெங்கு கொசு பரவ முக்கிய காணமாகி விடுகிறது ஆகையால் சம்பந்தப்பட்டவர்களிடம் அனுமதி பெற்று அது போன்ற இடங்களில் கொசு ஒழிப்பு மருந்து அடிக்க முயற்சிக்க வேண்டும் என்றார்.

கீழக்கரை நகராட்சி நிர்வாகம் இது போன்ற விசயங்களையும் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வாய்ப்புகள் உள்ளன.

டெங்கு காய்ச்சல் என்றால் என்ன?

  • இது ஒரு வைரஸ் கிருமியினால் ஏற்படும் காய்ச்சல்.
  • இவ்வகை காய்ச்சல் ஏடிஸ் இஜிப்டி வகை கொசு கடிப்பதினால் பரப்பப்படுகிறது.
  • இவ்வகை கொசு கடித்த 5 அல்லது 6 நாட்கள் கழித்து இந்த காய்ச்சல் ஏற்படுகிறது.
  • இவ்வகை காய்ச்சல் இரண்டு விதத்தில் தோன்றும். ஒன்று டெங்கு காய்ச்சல், மற்றொன்று இரத்தப் போக்குடன் கூடிய டெங்கு காய்ச்சல்.
  • டெங்கு காய்ச்சல் ஒரு மோசமான நோய், ப்ளூ போன்று சுகாதார கேட்டினை விளைவிக்கும். இரத்தப்போக்குடன் கூடிய டெங்குகாய்ச்சல் மிகவும் மோசமான நோய். இவ்வகை காய்ச்சல் மரணத்தையும் விளைவிக்கும்.
  • டெங்கு காய்ச்சல் மற்றும் இரத்தப்போக்குடன் கூடிய டெங்கு காய்ச்சல் இருக்குமோ? எனத் தோன்றும் போது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

டெங்கு காய்ச்சலின் அடையாளம் மற்றும் அறிகுறிகள்

  • திடீரென மிக அதிகபப்டியான காய்ச்சல் ஏற்படுவது.
  • தாங்கிக் கொள்ள முடியாத முன் தலைவலி
  • கண்களின் பின்புறம் வலி தோன்றும். இது கண்களின் அசைவையும் கடினமாக்கும். தசை மற்றும் மூட்டுவலி ஏற்படும்.
  • ருசியை உணரும் தன்மை மற்றும் பசி ஏற்படுவது குறையும்.
  • மார்பு மற்றும் கைகளில் தட்டம்மை போன்று தழும்புகள் எற்படும்.
  • குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படும்.
இரத்தப்போக்குடன் கூடிய டெங்கு காய்ச்சலின் அடையாள அறிகுறிகள்
  • தொடர்ச்சியான தாங்கிக்கொள்ள முடியாத வயிற்றுவலி.
  • சருமம் வெளிர்தல், சில்லிட்டுப்போதல் மற்றும் பிசுபிசுப்புத்தன்மை ஏற்படும்.
  • மூக்கு, வாய், பல் ஈறுகள் மற்றும் தோலில் உள்ள கொப்புளங்களிலிருந்து இரத்தம் வடிதல் ஏற்படும்.
  • இத்துடன் அல்லது இரத்தம் இல்லாமலோ அடிக்கடி வாந்தி ஏற்படும்.
  • தூக்கமின்மை மற்றும் ஓய்வின்மை ஏற்படும்.
  • அதிக தாகம் ஏற்படும் மற்றும் நாக்கு வறண்டுபோகும்
  • வேகமான (படபடவென) பலவீனமான இரத்த நாடி காணப்படும்.
  • சுவாசிப்பதில் கடினத்தன்மை ஏற்படும்.
இந்நோய்தொற்றக்கூடிய காலம்

டெங்கு காய்ச்சல் கண்ட நபரை கொசு கடித்தல், டெங்கு காய்ச்சல் கண்டவரிடமிருந்து வைரஸ் கிருமி கொசுவின் உடலில் 3 முதல் 5 நாட்கள் வரை இருக்கும். இந்த காலகட்டத்தில் அக்கொசு மற்றொருவரை கடிக்கும் போது கொசுகடிபட்ட நபருக்கு டெங்கு காய்ச்சல் தோன்றுகிறது.

டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்படும் நபரின் வயது மற்றும் இனம்

எல்லா வயதினர் மற்றும் இருபாலினருக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படும். இரத்தப் போக்குடன் கூடிய டெங்கு காய்ச்சல் ஏற்படும்போது குழந்தைகள் இறப்பது மிக அதிகமாக காணப்படும்.

டெங்கு/இரத்தப்போக்குடன் கூடிய டெங்கு நோய்பரப்பும் காரணிகள்

  • ஏடிஸ் இஜிப்டி வகை கொசு டெங்கு / இரத்தப்போக்குடன் கூடிய டெங்கு காய்ச்சலை பரப்புகிறது.
  • இது சிறிய கருப்பு வெள்ளை, வெள்ளை நிற கோடுகளை கொண்ட சுமார் 5 மில்லி மீட்டர் அளவிலான ஒரு கொசு.
  • இந்த வகை கொசுக்களின் உடலில் 7 முதல் 8 நாட்களில் டெங்கு காய்ச்சலை பரப்பும் வைரஸ் வளர்ச்சி அடைய எடுத்துக் கொள்கிறது. பின்னர் இந்நோயினை மற்றவருக்கு பரப்புகிறது.

கொசுவின் உணவுப்பழக்கம்

  • இவ்வகை கொசுக்கள் பகல் வேளைகளில் கடிக்கும். முக்கியமாக வீட்டிலும், வீட்டைச்சுற்றியுள்ள மனிதர்களின் இரத்தத்தை உட்கொண்டும் வாழக்கூடியவை. திரும்பத் திரும்பக் கடிக்கும் தன்மை கொண்டவை.

ஓய்வெடுக்கும் பழக்கம்

  • வீட்டிலும், வீட்டைச் சுற்றியுள்ள இடங்களிலும் ஓய்வெடுக்கும்.
  • வீட்டின் இருட்டான மூலைகள், தொங்கிக்கொண்டிருக்கும் ஆடைகள், குடைகள் அல்லது மேசைநாற்காலி போன்றவைகளின் அடியில் ஓய்வெடுக்கும்.

இனப்பெருக்கம் செய்யும் முறை

  • ஏடிஸ் எஜிப்டி வகை கொசுவானது பாத்திரங்கள் மற்றும் நீரை சேமிக்கும் பாத்திரங்களில் மிக குறைந்த அளவு தண்ணீர் இருந்தாலும், தங்கள் இனப்பெருக்கத்தை செய்யும்.
  • இவ்வகை கொசுக்களின் முட்டைகள் ஓராண்டிற்க்கும் மேலாக தண்ணீர் இல்லாத சூழ்நிலையிலும் உயிரோடு இருக்கும் தன்மை கொண்டவை.

இனப்பெருக்கத்திற்கு உகந்த இடங்கள்

குளிர்ப்பானங்கள், பீப்பாய்கள், ஜக்குகள், பானைகள், வாளிகள், பூந்தொட்டிகள்(பிரிட்ஜ்), தாவரத் தொட்டிகள், நீர்தேக்கத் தொட்டிகள், பள்ளங்கள், பாட்டில்கள், டப்பாக்கள், டயர்கள், கூரையில் உள்ள நீர் வடி பள்ளங்கள், குளிப்பதனப் பெட்டியிலிருந்து சொட்டும் தண்ணீரை சேமிக்கும் பாத்திரங்கள், சிமெண்ட் தொட்டிகள், சிமெண்ட் கலசங்கள், மூங்கில் குடில்கள் (புட்டிகள்) தேங்காய் ஓடுகள், மரத்திலுள்ள துணைக் குழிகள் மற்றும் மழைநீர் தேங்கியுள்ள / சேகரிக்கப்பட்டுள்ள அனைத்து இடங்களிலும் இவை தங்கள் இனப்பெருக்கத்தை செய்கின்றன.

டெங்கு / இரத்தப்போக்குடன் கூடிய டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துதல்.

  • டெங்கு நோய் வரும்முன் காப்பது சரியானது.
  • இவ்வகை நோய்களுக்கு மருந்தோ தடுப்பு மருந்தோ இல்லை.
  • ஏடிஸ் இஜிப்டி வகை கொசுக்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதே இவ்வகை நோய்களை தடுப்பதற்கான சிறந்த முறையாகும்.
  • இவ்வகை நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.சரியான சிகிச்சை முறையை கையாள்வதின் மூலம் உயிரிழப்பு நேரிடுவதை கணிசமாகக் குறைக்கலாம்.

பரிசோதனைகள்:

ரத்தப் பரிசோதனைகள் மிகவும் இன்றியமையாதவை. சிறுநீரகம் மற்றும் கல்லீரலின் செயல்பாடுகளை அறிவதற்காக, ரத்தத்தில் சிவப்பு மற்றும் வெள்ளை அணுக்களின் அளவு, ரத்தம் உறைவதற்கான நேரம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளைச் செய்யவேண்டும்.

டெங்கு காய்ச்சல் தான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேறு சில பரிசோதனைகளைச் செய் வேண்டும். எக்ஸ்-ரே, ஸ்கேன் (வயிற்றுப் பகுதி) ஆகியவற்றை எடுக்கவேண்டும். அடிக்கடி ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டியவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குக் கீழ்க்கண்ட அறிகுறிகள் இருந்தால், அவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

  • சோர்வாக இருத்தல் அல்லது ஆசுவாசப்படுத்த முடியாமல் அழுதல்.
  • ரத்தக் கசிவு (எவ்வளவு குறைவான அளவாக இருந்தாலும்) கை கால்கள் நீலம் பூத்திருத்தல்.
  • உடல் சில்லிட்டுப்போதல்.வயிற்று வலி மிக அதிகமாக இருத்தல். ரத்த அணுக்கள் குறைவாக இருத்தல்.
  • நுரையீரலைச் சுற்றியோ, வயிற்றிலோ நீர் கோத்துக் கொள்ளுதல், ரத்த அழுத்தம் குறைவது, நாடித் துடிப்பு சீராக இல்லாத நிலை, உணவு சாப்பிடவோ, தண்ணீர் குடிக்கவோ முடியாத நிலை.

சிகிச்சை:

டெங்கு காயச்சலுக்கென பிரத்யேக மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. காய்ச்சல் குறைவதற்கு பாரசிடமால் கொடுக்க வேண்டும்.

உணவு சாப்பிட முடியாத குழந்தைகளுக்கு தேவையான அளவு நீர்ச்சத்து கொடுக்க வேண்டும். தேவைப்பட்டால், குழந்தைகளை மருத்துவமனையில் சேர்த்து சிவப்பு அணுக்களோ அல்லது வேறு இரத்த அணுக்களோ ஏற்ற வேண்டும்.

தடுக்கும் முறைகள்:

* கொசுக்களை ஒழிக்க வேண்டும். * வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். * கொசு மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும். * டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களை கொசுக்கள் கடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கவனத்துடன் இருப்போம்… டெங்கை வீழ்த்துவோம்…

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!