வடக்கு டெல்லியில் சாலையோரம் வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம் ஆண்கள் இருவரை உதைத்து, தாக்கிய காவல்துறை துணைக் கண்காணிப்பாளரை டெல்லி காவல்துறை பணியிடைநீக்கம் செய்துள்ளது.
தொழுகையில் ஈடுபட்டிருந்த இருவரை அந்த அதிகாரி தாக்குவதைக் காட்டும் காணொளி இணையத்தில் வலம் வந்தது. இரண்டாவது நபரைஅந்த அதிகாரி தலையில் தாக்கியதைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் தலையிட்டு அவரைத் தடுத்து நிறுத்தி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இண்டர்லோக் மெட்ரோ நிலையத்துக்கு அருகே வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்தது. தொழுகையாளிகளால் அங்குள்ள பள்ளிவாசல் நிரம்பிவிட்டதால் சில ஆண்கள் வெளியே தொழுததாக சில ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த அதிகாரியின் மூர்க்கத்தனமான செயலால் கோபமடைந்த மக்கள், சாலையை வழிமறித்து அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதைத் தொடர்ந்து, சட்ட ஒழுங்கை நிலைநாட்ட அப்பகுதியில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், வடக்கு டெல்லி காவல்துறைத் துணை ஆணையர் எம்.கே.மீனா வெளியிட்ட அறிக்கையில், “காணொளியில் காணப்பட்ட காவல்துறை அதிகாரி உடனடியாக பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்று கூறினார்.
இச்சம்பவம் அவமானமிக்கது என டெல்லி காங்கிரஸ் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுளது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment.