Home செய்திகள்உலக செய்திகள் வானொலி மற்றும் தொலைக்காட்சி கம்பியற்ற தகவல்தொடர்பு வளர்ச்சிக்கு வித்திட்ட, நோபல் பரிசு பெற்ற ஜெர்மானியக் கண்டுபிடிப்பாளர் கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் நினைவு தினம் இன்று (ஏப்ரல் 20, 1918).

வானொலி மற்றும் தொலைக்காட்சி கம்பியற்ற தகவல்தொடர்பு வளர்ச்சிக்கு வித்திட்ட, நோபல் பரிசு பெற்ற ஜெர்மானியக் கண்டுபிடிப்பாளர் கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் நினைவு தினம் இன்று (ஏப்ரல் 20, 1918).

by mohan

கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் (Karl Ferdinand Braun) ஜூன் 6, 1850ல் ஜெர்மனியில் உள்ள ஹெஸ்ஸன் கேசல் என்ற பகுதியில் புல்டா என்ற நகரத்தில் பிறந்தார். உள்ளூரில் இலக்கணப்பள்ளி ஒன்றில் சேர்ந்து கல்வி பயின்றார். இவர் இளமையில் கல்வியில் ஆர்வம் மிகுந்தவராகவும், அறிவியலில் மிகச் சிறந்த அறிவு படைத்தவராகவும் திகழ்ந்தார். இவர் சிறுவயதிலேயே அறிவியல் கட்டுரைகள் எழுதி அவை அனைத்தும் பல இதழ்களில் வெளியிடப்பட்டன. அறிவியல் ஆசிரியராக உருவாக வேண்டும் என்ற ஆர்வத்துடன் அறிவியலையும், கணிதத்தையும் பாடங்களாக எடுத்துக்கொண்டு மார்பர்க் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். பிறகு பெர்லின் பல்கலைக் கழகத்திற்கு மாறி அங்கு இயற்பியலைச் சிறப்புப் பாடமாக எடுத்துப் படித்தார். 1872ல் முதுகலைப் பட்டத்தையும் பிறகு முனைவர் பட்டத்தையும் பெற்றார். 1885ல் அமெலி புக்லர் என்ற பெண்ணை மணந்தார்.

உர்சுபர்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் குயிங்க் என்பவரின் உதவியாளராகப் பணி புரிந்தார். 1874ல் லெய்ப்சிக் என்ற ஊரில் உள்ள புனித தாமஸ் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மார்பர்க் பல்கலைக்கழகத்தில் கோட்பாட்டு இயற்பியலில் மிகச் சிறந்த பேராசிரியர் என்ற வகையில் பணியில் அமர்த்தப்பட்டார். 1880ல் ஸ்டாஸ்பர்க் பல்கலைக் கழகத்தில் அதே பணிக்கு அழைக்கப்பட்டார். 1883ல் கார்ல்ஸ்குகே என்ற ஊரில் அமைந்திருந்த தொழில்நுட்பக் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றினார். இறுதியில் 1885ல் ‘டூபின்சன் பல்கலைக்கழகத்தில்’ சேர்ந்து பணியாற்றினார். அங்கு புதிய இயற்பியல் கல்வி நிறுவனம் ஒன்றை உருவாக்கினார். பின்னர் இரண்டு வருடங்களுக்குப் பிறகு 1895ல் ஸ்ட்ராஸ்பர்க் பல்கலைக்கழகத்திற்குத் திரும்பி வந்தார். அங்கு இயற்பியல் கல்வி நிறுவனத்தின் முதல்வராகப் பணியில் அமர்ந்தார்.

மீள்சக்தியுடைய கம்பிகள், சுருள்கள் ஆகியவற்றின் அலைவுகள் (Oscillations of strings and elastic) குறித்து இவருடைய முதல் ஆய்வு அமைந்தது. கம்பிகள் இயங்கும் சூழ்நிலை, கம்பி அசையும் வீச்சின் தனமை ஆகியவற்றைப் பொருத்து அவற்றின் அலைவுகள் எவ்வாறு அமைகின்றன என ஆரய்ந்தார். வெப்ப இயக்கவியல் கொள்கையையும், திடப்பொருள்களின் கரை தன்மை, அழுத்தத்தைப் பொருத்து எவ்வாறு மாற்றமடைகின்றன என்ற ஆய்வினையும் மேற்கொண்டார். இவருடைய முதன்மையான ஆய்வுப்பணிகள் மின்னியலைப் பொருத்தே அமைந்தன. ஓம் விதியிலிருந்து மாறுபட்டவைகள் பற்றியும், வெப்ப மூலங்களிலிருந்து மீளும் தன்மை கொண்ட தனிமங்களில் மின்னியக்கு விசையைக் கணக்கிடுவது பற்றியும் ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டார்.

மின் பகுளிகளில் கரைந்துள்ள உலோக உப்புகளின் மின் கடத்தும் தன்மை பற்றி ஆய்வதில் தனிக்கவனம் செலுத்தினார். அவற்றில் கரையாத உலோக சல்பைடு படிகங்கள், பிற படிக வடிவமுள்ள திடப் பொருள்களின் மின்கடத்தும் தன்மை பற்றி ஆராய்ந்தார். பல உலோக சல்பைடுகளில் மின்தடையின் அளவு செலுத்தப்படும் மின்னழுத்தத்தின் திசைகள் மற்றும் அளவுகளைப் பொருத்து மாறுபடுகிறது என்பதைக் கண்டறிந்தார். காரீய சல்பைடு கலந்த குறை மின்கடத்தியான கலினா(galena) என்ற படிகத்தின் மின் திருத்தும் தன்மையை இரு மின்வாயாக உருவாக்கிப் பயன்படுத்தினார். இதுதான் அன்றைய முதல் குறை மின்கடத்தியாகும். அப்போது அதை அதிகமாகப் பயன்படுத்தப்படவில்லை எனினும் 1948லிருந்து இது அதிகமாகப் பயன்பட ஆரம்பித்தது.

பிரவுன் இருபது ஆண்டுகள் பல்கலைக்கழக ஆசிரியப் பணியிலும், இயற்பியல் தொடர்பான ஆய்வுகளிலுமே கவனம் செலுத்தினார். பலவிதமான மின்னாய்வுக் கருவிகளை உருவாக்கினார். 1897ல் எதிர்மின் கதிர் அலையியற்றி (Cathode ray oscilloscope) ஒன்றையும் மின்னோட்டமானி (Electrometer) ஒன்றையும் உருவாக்கினார். இவர் அதற்கான காப்புரிமையைப் பெறவில்லை ஆனால் அது எப்படி இயக்கப்பட வேண்டும் என்பதை எவரும் புரிந்துகொள்ளும்படி விளக்கக்கட்டுரையாக எழுதி வெளியிட்டார். இவர் இவற்றை உருவாக்கிய சமயத்தில்தான் எதிர்மின் கதிர்கள் வெளியேற்றப்படுவது பற்றிய கருத்துகள் வெளியாயின. எக்ஸ் கதிர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 1898ல் கம்பியில்லாத் தந்தி முறை ஆய்வுகளில் கவனம் செலுத்தினார். அதிக அதிர்வெண் கொண்ட மின்னோட்டத்தின் உதவியுடன் நீரின் வழியே மோர்ஸ் சைகைகளைப் பரப்பினார். அலைவின் மூடிய சுற்றை இதில் அறிமுகப்படுத்தினார். குறிப்பிட்ட திசைகளில் மின் சைகைகளைச் செலுத்தினார். 1902ல் சாய்தள அலைபரப்பி சாதனம் மூலம் அனுப்பிய அலைகளைத் திரும்பப் பெறுவதில் வெற்றி கண்டார். நீரிலும், காற்றிலும் கம்பியில்லாத் தந்திமுறை என்ற தலைப்பில் இவற்றை விவரமாக எழுதி வெளியிட்டார். கம்பியற்ற தகவல்தொடர்பு முறையில் ஆய்வு செய்து, வானொலியைக் கண்டறிந்த அறிஞர் மார்க்கோனியுடன் 1909ல் நோபல் பரிசினைப் பகிர்ந்து கொண்டார். வானொலி மற்றும் தொலைக்காட்சி தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டார்.

முதல் உலகப் போருக்குப் பிறகு சட்டப்பூர்வமான காப்புரிமை பற்றிய ஒரு வழக்கில் சாட்சி கூறுவதற்காக அமெரிக்கா சென்றார். அதன்பின் இவர் ஆய்வுகளில் ஈடுபடவில்லை. தன்னுடைய இறுதிக்காலத்தை அமெரிக்காவில் கழித்தார். நோபல் பரிசு பெற்ற ஜெர்மானியக் கண்டுபிடிப்பாளர் கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் ஏப்ரல் 20, 1918ல் தனது 67வது அகவையில் நியூயார்க், அமெரிக்காவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். Source By: Wikipedia தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!