இராமநாதபுரம், ஆக.17- இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகே அக்காள்மடம் மீனவர் குடியிருப்புக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று மீனவர்களிடம் கலந்துரையாடினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை ராமநாதபுரத்திலிருந்து ராமேஸ்வரம் சென்றார். செல்லும் வழியில், பாம்பன் அருகே அக்காள்மடம் மீனவர் குடியிருப்புக்கு சென்று அங்குள்ள மீனவர் குடும்பத்தாருடன் கலந்துரையாடினார். நாளை (18.8.2023) காலை மண்டபம் முகாமில் நடைபெறவுள்ள தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் மற்றும் மீனவ சங்கங்கள் சார்பில் மீனவர் நல மாநாடு, மீனவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கும் பொருட்டு அக்காள்மடம் மீனவர் குடியிருப்பு பகுதிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மீனவர்களிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, அப்பகுதி மக்கள் குடியிருப்பு பட்டா வேண்டுமென கோரிக்கை வைத்தனர். பட்டா வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்து இருக்கிறீர்களா? என அங்குள்ள பெண்களிடம் கேட்டறிந்தார். பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை முதலமைச்சர் பெற்றுக் கொண்டார். அக்காள்மடம் மீனவர் குடியிருப்பு மாணாக்கருடன் முதல்வர் கலந்துரையாடி, அவர்களது படிப்பு விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
15
You must be logged in to post a comment.