இராமநாதபுரம் மூலக்கொத்தளம் வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் நலச்சங்கம் 1984ல் துவங்கப்பட்டது. இதில் 144 உறுப்பினர்கள் உள்ளனர். மெட்ரிக்., பள்ளி, கோயில் ஆகியவற்றை இச்சங்கம் நிர்வகித்து வருகிறது. இந்நிலையில் 2015 முதல் அறக்கட்டளை என பெயர் மாற்றபட்டு செயல்படுவதாக தெரிந்தது. இது குறித்து மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் தகவல் அறியும் சட்டத்தில் விளக்கம் கோரப்பட்டது. அதில் இறந்தோரின் பெயரில் போலி கையெழுத்து, ஆவணம் தயாரித்து அறக்கட்டளையாக பெயர் மாற்றம் செய்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டது தெரிந்தது. இது குறித்து, மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மூலக்கொத்தளம் வீட்டுவசதி வாரிய குடியிருப்போர் பகுதியைச் சேர்ந்த ருத்ரசேகர் மகன் சதீஷ்குமார் கடந்த 9 மாதங்களுக்கு முன் புகார் அளித்தார். மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க அப்போதைய எஸ்.பி., அறிவுறுத்தினார்.
இந்நிலையில் அறக்கட்டளையாக பெயர் மாற்றம் செய்து, சங்கம் நிர்வகிக்கும் மெட்ரிக்., பள்ளி கல்வி கட்டணத்தில் பல லட்சம் ரூபாய் மோசடி குறித்து காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மீண்டும் புகார் கொடுத்தார். எஸ்.பி., அறிவுறுத்தல்படி, நலச்சங்கத்தை 2015 டிச.15ல் அறக்கட்டளையாக பெயர் மாற்றம் செய்து, வங்கி கணக்கில் ரூ.9 கோடி வரை மோசடி செய்ததாக புகார்படி சங்கத் தலைவர் சண்முக ராஜன், பி.கிருஷ்ணன், கே.கிருஷ்ணன், சந்திரன், குருசாமி, கதிரேசன், வருவாய் துறை ஊழியர் தசரதராமன் வட்டார வளர்ச்சி அலுவலர் (ஓய்வு) ராஜேந்திரன், நில அளவை அலுவலக கண்காணிப்பாளர் மாயகிருஷ்ணன், பள்ளி ஆசிரியர் ராமகிருஷ்ணன், பாலகிருஷ்ணன், வளையாபதி, கார்த்திகேயன், வேலு, உஷா ஆகியோர் மீது பஜார் போலீசார் வழக்கு பதிந்தனர். இதில் சார் பதிவாளர் (ஓய்வு) கே.கிருஷ்ணன் 69, உடற்கல்வி ஆசிரியர் (ஓய்வு) வளையாபதி, கப்பல் பணியாளர் (ஓய்வு) வேலு 67 ஆகியோரை இன்ஸ்பெக்டர் பிரபு கைது செய்து, 12 பேரை தேடி வருகிறார்.
You must be logged in to post a comment.