செய்திகள்
தேவர் ஜெயந்தி, குரு பூஜை பசும்பொன்னில் கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் ஆய்வு..
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அக்.30இல் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 111-வது ஜெயந்தி, 56-வது குரு பூஜை கொண்டாடப்படுகிறது.அங்கு பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் தலைமையில். தென் மண்டல காவல் துறை தலைவர் கே.பி.சண்முக ராஜேஸ்வரன், இராமநாதபுரம் சரக காவல் துறை துணைத் தலைவர் காமினி, காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா இன்று (அக்.16) ஆய்வு செய்தனர்.
இவ்விழாவில் அஞ்சலி செலுத்த மிக முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் , தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் குறித்து களஆய்வு நடத்தினர்.
மேலும் அவசர கால சூழ்நிலைகளை எதிர்கொள்ள மருத்துவக்குழுக்கள், ஆம்புலன்ஸ், தீயணைப்பு, காவல் அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மின்சார வாரியம் தொடர்பாக இராமநாதபுரம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பாக குறை தீர்ப்பு கூட்டம்…
இராமநாதபுரம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பாக மின்சார வாரியம் சம்பந்தமாக நடந்த குறை தீர்ப்பு கூட்டத்தில் கீழக்கரை சார்பாக மக்கள் டீம் காதர் மற்றும் செய்யது இபுறாகீம் ஆகியோர் கலந்து கொண்டு கீழக்கரையின் மின்சார வாரியம் சம்பந்தமான பிரதான குறைகளை எடுத்து வைத்தனர்.
இக்கூட்டத்தில் கீழக்கரை பிரதான பிரச்சிறைகளான புகார் குறித்த தகவல் தர நிரந்தர தொலை பேசி எண், அவசர கால உதவி, துணைமின் நிலையத்தில் குடிநீர் தேவை, புதிய பேரூந்து நிலையத்தில் உபயோகத்தில் இல்லாமல் இருக்கும் மின்சார கட்டணம் செலுத்தும் வசதியை மீண்டும் ஏற்படுத்தி தருதல்.
நகருக்குள் செம்பு கம்பி மாற்ற வேண்டிய பணிகளை துரிதபடுத்துதல். ஆள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல் போன்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு பொறியாளர் ஆறுமுக ராஜ் தலைமையிலும், மின்சார அலுவலக அதிகாரி கங்காதரன் முன்னிலையிலும் நடைபெற்றது.
தகவல்:- மக்கள் டீம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முதியோர் வாழ்வு நாள் இறுதி காலத்தில் மன அமைதியாக இருங்கள் : மாவட்ட ஆட்சியர் பேச்சு..
இராமநாதபுரம் சமூக நலத்துறை, ஹெல்ப்பேஜ் இந்தியா, முதியோருக்கான முதியோர் அமைப்பு ஆகிய இ சார்பில் உலக முதியோர் தின விழா உச்சிப்புளியில் நடந்தது.
முதியோருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வழங்கினார். அவர் பேசுகையில்: ஒவ்வொரு வாழ்க்கையிலும் இளமை பருவம் போல் முதுமை பருவமும் ஒரு அங்கம் தான். வயதாகி விட்டது என்ற தாழ்வு மனப்பான்மையை போக்கி எண்ணங்களை இளமை வைத்துக் கொண்டு, சாமர்த்தியமாக செயல்பட வேண்டும். பிரச்னைகள் எதுவானாலும் எளிதாக எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை பற்றிய சிந்தனையை விட்டொழிக்க வேண்டும். யாரையும் சார்ந்து வாழாமல் என்னால் இயலும் என்ற தன்னம்பிக்கையுடன் செயலாற்ற வேண்டும். வாழ்வின் இறுதி கால கட்டத்தை மன அமைதி, இருக்க கற்று கொள்ள வேண்டும் என அவர் பேசினார்.
மாவட்ட சமூக நல அலுவலர் குணசேகரி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் கிருஷ்ணவேணி, முதியோர்களுக்கான முதியோர் அமைப்பு இயக்குநர் இளங்கோ ராஜரத்தினம், திட்ட மேலாளர் கார்த்திக் ராஜா, ஹெல்ப் பேஜ் இந்தியா மாநில தலைவர் சிவக்குமார், செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் கயிலைச்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கல்கிணற்றுவலசை டாக்டர் எம்ஜிஆர் ஆசிரியர் பயிற்சி கல்லூரி, உச்சிப்புளி நேஷனல் அகாடமி பள்ளி மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சி நடந்தன.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில். இடியுடன் மழை. மின்னல் தாக்கி வாலிபர் பலி …
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கள்ளீயூர் பகுதியை சார்ந்த சந்திரன் மகன் சரவணன் வயது 23 என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் தென்கரை கோட்டைக்கு சென்ற போது இடியுடன் மழை பெய்ததால் கொட்டாயூர் என்ற இடத்தில் சாலை ஓர புளிய மரத்து அடியில் ஒதுங்கிதுள்ளார்.
அப்போழுது மின்னல் தாக்கியதில் அதே இடத்தில் சுருண்டு விழந்து பலி ஆகியுள்ளார். மேலும் இவ்விபத்தில் இறந்து போன வாலிபருக்கு திருமணமாகவில்லை. இவர் கூலி தொழிலாளியும் ஆவார்.
இது சம்பந்தமாக கோபிநாதம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இவர் நேற்று இரவு தான் கேரளாவில் இருந்து கிள்ளியூர் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்:- கே.எம்.வாரியார், வேலூர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை முகைதீனியா பள்ளியில் “BRAIN RAIN 2018” அறிவியல் கண்காட்சி..வீடியோ காட்சிகள்..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குத் தெரு முஹைதீனியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு “BRAIN RAIN 2018” என்ற அறிவியல் கண்காட்சி Dr.APJ.Abdul Kalam Science Forum அமைப்புடன் இணைந்து 15/10/2018 மற்றும் 16/10/2018 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.
இக்கண்காட்சியை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இராமநாதபுரம் தாசில்தார் தமீம்ராசா கலந்து கொண்டார்.
இக்கண்காட்சியில் 600கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இக்கண்காட்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் வருகையாளர்களுக்கு அழகிய முறையில் தங்களுடைய படைப்புகளைப் பற்றி அழகுற விவரித்தனர்.
இக்கண்காட்சியில் கலாம் ஏவிய விண்கலம், பாம்பன் பாலம், விவசாயம், விண்கோள்கள் மற்றும் இன்னும் பல அறிவியல் படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
மேலும் இன்று (16/10/2018) மாலை முதல் பெற்றோர்களும், பொதுமக்களும் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். அதில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டு சென்றனர்.
மேலும் இந்த கண்காட்சிக்கு பள்ளி தாளாளர் மௌலா முகைதீன் தலைமையில் துணை தலைவர் MMS முகைதீன் இபுராஹிம், அறிவியல் குழு தலைவர் சாதிக் ரபீக், துணை செயலாளர் முகம்மது ரஃபீக், டாக்டர் ராசீக்தீன், பொருளாளர் பஷீர் அகமது மற்றும் பல கல்விக்குழு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.
மேலும் ரோட்டரி சங்க தலைவர் சுந்தரம்,செயலாளர் ஹசன்,பொருளாளர் முனியசங்கர் மற்றும் பல அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டு பள்ளி குழந்தைகளின் படைப்புகளை பார்வையிட்டு மாணவ, மாணவிகளை வாழ்த்தினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் டிஜஜி முகாம் அலுவலகம் செல்லும் வழியில் வெடி குண்டு வீசி இருவர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை சூரப்புலி சுப்ரமணியன் மகன் கார்த்தி 36. இவரது நண்பர் குண்டு விக்கி 32. இவர்கள் இருவரும் நீதிமன்றம் சென்று விட்டு, மாலை 5:30 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் திரும்பினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் வழி மல்லம்மாள் கோயில் பகுதியில் வந்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கு காரில் காத்திருந்த கும்பல் இருவர் மீது வெடிகுண்டு வீசியது.
இதில் நிலை குலைந்து இரு சக்கர வாகனத்தை விட்டு தப்பி ஓடிய இருவரையும் டிஜஜி முகாம் அலுவலகம் பகுதியில் வைத்து அக்கும்பல் நீண்ட அரிவாளால் வெட்டியது. இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.
இச்சம்பவத்தில் கேணிக்கரை போலீசார் கைப்பற்றிய கார்த்தி, விக்கி உடல்களை ராமநாதபுரம் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். கடந்த மே 20 இல் வாலாந்தரவை அருகே காதணி விழா நடந்த வீட்டில் திறந்த வெளியில் இரவில் தூங்கிய பூமிநாதன், விஜய் ஆகியோர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக வாலாந்தரவை கார்த்தி உள்பட 20 பேர் மீது கேணிக்கரை போலீசார் கைது செய்தனர்.
இந்த இரட்டை கொலை தொடர்பான முன் விரோதத்தில் பழிக்குப் பழியாக இந்த இரட்டை கொலை 5 மாதம் கழித்து நடந்துள்ளது. இதனால் ராமநாதபுரம், வாலாந்தரவையில் பதற்றம் நிலவுகிறது. கொலை நடந்த இடத்தை டி ஐ ஜி காமினி, எஸ்.பி., ஓம் பிரகாஷ் மீனா ஆகியோர் பார்வையிட்டனர். இதற்கிடையில் போலீசில் வாலாந்தரவை பாஸ்கரன் 40, முரளி 21, அர்ஜீன் 25, ரூபன் 25, முருகேசன் 37 ஆகியோர் தப்பிச் சென்ற காருடன் நயினார்கோவில் போலீசில் சரணடைந்தனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் மாவட்டம் காட்பாடியில் முத்தரையர் சமுதாய அறக்கட்டளை துவக்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு இம்ப் காப்ஸ் இயக்குநர் சித்த மருத்துவர் பி அர்சினன் தலைமை தாங்கினார்.
மேலும் இந்த அறக்கட்டளை துவக்க விழாவில் வேலூர் மத்திய மாவட்ட திமுக துணைசெயலாளர் RPஏழுமலை ஒன்றிய திமுக செயலாளர் வேலூர் ஞானசேகரன் உள்ளிட்ட சமுதாய தலைவர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அறக்கட்டளை தலைவர் காட்பாடி சரவணன் செயலாளர் சுரேஷ் பொருளாளர் சத்தியமூர்த்தி இளைஞர் அணி செயலாளர் வெங்கடேசன் சுபாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட செய்தியாளர்
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை நகராட்சி அந்தஸ்து அடைந்த பின்பு கூட மின்சார வாரிய ஊழியர்களின் எண்ணிக்ழைக தகுதியான அளவுக்கு உயர்த்தப்படாமல் இன்றளவும் பற்றாக்குறையான சூழலே இருந்து வருகிறது. சாதாரண மின் தடை முதல் ஆபத்து காலத்திற்கு அழைத்தாலும் கூட மின்சார ஊழியர்களின் சவுகரியத்திற்கு தகுந்தாற் போல்தான் காரியங்கள் நடக்கும்.
நேற்று (15/10/2018) 20வது வார்டு வடக்குத் தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திடீரென உயர் மின் அழுத்தத்தால் வீட்டில் உள்ள டி.வி உட்பட அனைத்து மின்சார பொருட்களும் தீப்பிடித்து உபயோகமற்றதாகி கருகி போய் உள்ளது. அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களின் உதவியுடன் பொிய தீ விபத்து தடுக்கப்பட்டுள்ளது. அச்சமயத்தில் மின்சார வாரியத்தை பல வகையில் தொடர்பு கொண்டும் தொடர்பு கொள்ள முடியாத சூழலே ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் தெருவின் மத்தியில் உள்ள வீட்டில் நடந்ததால் அருகில் உள்ள மக்கள் காப்பாற்றியுள்ளார்கள். இதே சம்பவம் தனியான பகுதியில் நடந்து இருந்தால், உயிர் பலி ஆகியிருந்தால் கூட யாரும் உதவிக்கு வந்திருக்கமாட்டார்கள். அனைத்திலும் மிகை மாநிலம் என்று மார்தட்டி கொள்ளும் நிர்வாகம், அவசர காலத்தில் உதவ மின்சார வாரியத்தில் ஏன் ஒரு தனிப்பிரிவை உருவாக்க கூடாது என்பதுதான் பாதிக்கப்பட்டவர்களின் கேள்வியாக உள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
குண்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் பரிசு வென்ற இஸ்லாமியா பள்ளி மாணவி..
இஸ்லாமியா உயர்நிலைப்பள்ளி 9ஆம் வகுப்பு மாணவி S. வாசுகி இன்று (16/10/2018) நடைபெற்ற மாவட்ட அளவிலான குண்டு எறிதல் போட்டியில் முதலிடம் பெற்று மண்டல் அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார்.
வெற்றி பெற்ற மாணவிக்கு பள்ளி நிர்வாகம் வாழ்த்துக்களையும், பாராட்டுதலையும் தெரிவித்தது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் கல்வித் தந்தை பி.எஸ்.அப்துர் ரஹ்மான் 91வது பிறந்ததினம் மற்றும் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் 87வது பிறந்ததினத்தையும் முன்னிட்டு இலக்கியச்சாரல் விழா இனிதே கொண்டாடப்பட்டது. 15.10.2018 அன்று காலை 10.30 மணியளவில் இறை வணக்கத்துடன் தொடங்கிய இவ்விழாவில் தமிழ்த்துறைத் தலைவர் வே.அகிலா வரவேற்புரை வழங்கினார். ஹாஜியானி. குர்ரத் ஜமீலா அறங்காவலர், சீதக்காதி அறக்கட்டளை சென்னை தலைமையுரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். சுமையா வாழ்த்துரை வழங்கினார். ஜமால் அமீர் சுல்த்தான் தலைவர், சர்வதேச இஸ்லாமியச் சங்கம், முன்னாள் தலைவர், தமிழ் பண்பாட்டுக் கழகம் ஹாங்காங் அவர்கள் வாழத்துரை வழங்கியதோடு தனது அறக்கட்டளையின் சார்பில் கல்லூரி மாணவிகளுக்கு ரூபாய் 50,000 கல்வி உதவித் தொகை வழங்கி சிறப்பித்தார். திரு.த.இராமலிங்கம் வழக்கறிஞர் சென்னை உயர்நீதி மன்றம், சென்னை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதில் இலக்கியத்தில் வாழ்வியல் சிந்தனைகளைப் பற்றிய கருத்துகளை மாணவிகளுக்குக் கூறினார். மேலும் இவ்விழாவில் அறிவியலால் நாம் பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா? என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புப் பட்டிமன்றத்திற்கு நடுவராகவும் அமர்ந்து தீர்ப்பு வழங்கி விழாவை சிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து அழகப்பா பல்கலைக்கழக இணைவுப் பெற்ற கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூபாய் 3000மும் இரண்டாம் பரிசாக ரூபாய் 2000மும் மூன்றாம் பரிசாக ரூபாய் 1000மும் வழங்கப்பட்டது. ஆறுதல் பரிசாக புத்தகங்களும் வழங்கப்பட்டது.
மேலும் பல்வேறு கல்லூரிகளிலிருந்தும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டார்கள். இறுதியாக தமிழ்த்துறை உதவிப்பேராசிரியை இரா.விசாலாட்சி நன்றியரை வழங்க நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறையுற்றது. இந்நிகழச்சிக்கான ஏற்பாடுகளை சீதக்காதி அறக்கட்டளையின் துணைப் பொது மேலாளர் சேக் தாவூதுகான் மற்றும் தமிழ்த்துறைப் பேராசிரியர்களும் செய்திருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன் உ முத்துராமலிங்க தேவர் நினைவு கலை, அறிவியல் கல்லுரியில் 111வது தேவர் ஜெயந்தி, 56 வது குருபூஜையையொட்டி நாட்டுநலப்பணி திட்டம் , .மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை ரத்த வங்கி, இராமநாதபுரம் நேரு யுவ கேந்திரா, யூத் ரெட் கிராஸ், செஞ்சுருள் சங்கம், கமுதி லயன்ஸ் கிளப் ஆகியோர் இணைந்து ரத்த தான முகாம் நடத்தினர்.
இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் வே.அருணாச்சலம், நாரணாயபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் ராமச்சந்திரபூபதி, கமுதி லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் சண்முகராஜ், பாண்டியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் கல்லூரி மாணவர்கள், மாணவிகள், பொதுமக்கள், பேராசியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு 200 க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினர். மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை டாக்டர் சங்கீதா , மேலாளார் ரவி, பேராசிரியர் அழகுமலை, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் போ.பால்பாண்டியன், யூத் ரெட் கிராஸ் வாகை பாண்டியன், செஞ்சுருள் சங்கம் பேராசிரியர் செயக்காளை, கமுதி நேரு யுவ கேந்திர ஒருங்கிணைப்பாளர் மு.வெள்ளைப்பாண்டியன் ஆகியோர் செய்திருந்தனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, கே.பி அகாடமி சார்பில் இராமநாதபுரம் சேதுநகர் கே. பி அப்ஸ்கேல் நர்சரி பிரைமரி பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் ஹாரூண் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் லதா தலைமையில் மாணவர் கள் கலாமின் தொலை நோக்கு இந்தியா 2020 குறித்து 10 கட்டளை உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். பள்ளி வளாகத்தில் மண்டபம் வட்டார வளர்ச்சி அலுவலர் பி.ராஜா மரக்கன்றுகள் நட்டார். ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட செயலாளர் ராக் லாண்ட் மதுரம், பள்ளி நிர்வாகிகள் அம்ம முத்து , நாச்சியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் ஆக்கிடா வலசை ஆரம்பப் பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 88வது பிறந்த தின எழுச்சி நாள் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் தலைமை ஆசிரியர் கோமகன் தலைமை வகித்தார். கிராமத் தலைவர் ரவி, கிராமக் கல்வி குழு பொருளாளர் மலை ராஜன் முன்னிலை வகித்தனர். ஏவுகணை நாயகன் கலாம் பேச்சு போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு புத்தகம் பரிசு வழங்கப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சத்யா, துணைத் தலைவர் தேவி கலந்து கொண்டனர். பெற்றோர் ஆசிரியர் கழக ஆசிரியை திவ்யா ஏற்பாடு செய்தனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கமுதி அருகே ஆண்கள் மட்டும் வணங்கிய பெண் தெய்வ வழிபாடு விநோத திருவிழா நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராம கண்மாய் கரை எல்லைப்பிடாரி அம்மன் பீடம் புரட்டாசி மாதத்தில் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் விநோத திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம்.
இதையொட்டி ஒரு வார காலத்திற்கு கோயில் இருக்கும் பகுதிக்கு, சொந்த காரணங்களுக்காகவோ, விவசாய பணிகளுக்காகவோ பெண்கள் அனுமதிக்கபடுவதில்லை. திருவிழாவை முன்னிட்டு 13.10.2018 இரவு 150 க்கும் மேற்பட்ட ஆண்கள் ஒன்று கூடி பீடம் அமைத்து, கைக்குத்தல் பச்சரிசி சாதம் வடித்து, 50 செம்மறி கிடாய் பலியிட்டு, சாதம் உருண்டை பிடித்து எல்லை பிடாரி அம்மனுக்கு படையலிட்டனர்.
இதன் பின்னர் அம்மன் பீடத்திற்கு 14.10.18 காலை சிறப்பு பூஜை நடைபெற்றது. அம்மனுக்கு படைத்த சாத உருண்டைகளை பனை ஓலையில் வழிபாட்டு சென்ற ஆண்களுக்கு பறிமாறப்பட்டது. எஞ்சிய சாத உருண்டைகள் அங்கேயே குழி தோண்டி புதைத்து செல்வது வழக்கம். ஒரு வயது முதல் வயதானோர் வரை ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இத்த திருவிழாவில் கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டு எல்லைப்பிடாரி அம்மனை வழிபட்டனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் மரைக்காயர்பட்டினம் துவக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் இங்குள்ள மர நிழலில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டு வந்தனர். அப்போது மரக்கிளைகளில் கூடும் காகம், குருவி உள்ளிட்ட பறவைகளின் இன்னல்களுக்கு ஆளாகினர். மாணவர்களின் நலனில் அக்கறை காட்டிய தலைமை ஆசிரியர் பொன். ரவிச்சந்திரன் இது குறித்து ஆசிரியர் பாலசுப்ரமணியனிடம் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து கிராமக் கல்வி, பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலம் மரைக்காயர்பட்டினம் துவக்கப்பள்ளியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் பயின்ற மாணவர் முகமது கானிடம் எடுத்து கூறினர். முகமது கான் சீரிய முயற்சியால், இப்பள்ளி முன்னாள் மாணவர் செய்யது காதிர் (மலேசியால் வேலை செய்கிறார்) பள்ளி முகப்பில் மேற்கூரை, தரை தளம் அமைத்து தர ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். முகமது கான், செய்யது காதிர் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க மலேசியா தீன் ஜூவல்லரி உரிமையாளர் ரூ.50,000 மதிப்பில் முகப்பு மேற்கூரை, தளம் அமைத்து கொடுத்தார்.
இதனால் இது நாள் வரை மரத்தடியில் மதிய உணவு சாப்பிட்டு வந்த மாணவர்களுக்கு மேற்கூரை நிழல் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என தலைமை ஆசிரியர் பொன். ரவிச்சந்திரன், ஆசிரியர் பாலசுப்ரமணியன் நெகிழ்ந்தனர். மேற்கூரை, தரைத்தளம் அமைய உறுதுணையாக நின்ற கஸ்டம்ஸ் (ஓய்வு) ஜனாப்.காதர், ஜமாத் பொறுப்பாளர்களுக்கு பள்ளி சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பள்ளிவாசல் டிரஸ்ட், மதுரை ப்ளூ மாடர்ன் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. கமுதி கலாவிருத்தி பள்ளி தாளாளர் ஹாஜி.என். அப்துல்காதர் தலைமை வகித்தார். பள்ளிவாசல் டிரஸ்டி முகமது மீரா முன்னிலை வகித்தார்.
இம்முகாமில் ரத்தநாள சிகிச்சை, கால் நரம்பு முடிச்சுகள், சக்கரை நோயாளிகளுக்கு பாத புண்கள், நோய் தீவிர தன்மை கண்டறிதல், கர்ப்பபை, பித்தப்பை, உடல் பருமன், தைராய்டு, சிறுநீரக கோளாறுகள், கல் அடைப்பு, குழந்தையின்மை ஹர்னியா, குடல் வால் நோய்களுக்கு மதுரை ப்ளு மாடர்ன் மருத்துவமனை டாக்டர்கள் பிரகாஷ், மகேஸ்வரன், தேவகி, வித்யா சிகிச்சை அளித்தனர். கமுதி வட்டார மக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் நஜியா மெட்ரிக் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா..
முன்னாள் ஜனாதிபதி டாக்டர் APJ.அப்துல் கலாம் பிறந்த நாள் விழா இராமநாதபுரம் மாவட்ட நஜியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. பசுமை இந்தியா 2020 ஓவியப் போட்டியில் வெற்ற பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகிர் கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.சோமசுந்தரம் பரிசு வழங்கினார்.
அதைத் தொடர்ந்து பள்ளி நிறுவனர் ஹாஜி ஹபிபுல்லா கான், தாளாளர் ஹெச்.பவுசுல் ஹனியா, பள்ளி துணைத் தலைவர் முகமது ஷரபத்துல்லாஹ், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் ஹாரூண், மாவட்ட செயலாளர் ராக்லாண்ட் மதுரம், பொருளாளர் குணசேகரன், யூத் ரெட் கிராஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளி நாயகம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முதுகுளத்தூரில் பதற்றம்.. முத்துராமலிங்கம் தேவர் பற்றி அவதூறு பேசியதால் தீடீர் மறியல்.. சமரசத்திற்கு பிறகு வாபஸ்..
முத்துராமலிங்க தேவர் பற்றி அவதூறாக பேசியதால் முதுகுளத்தூரில் திடீர் பதட்டம் ஏற்பட்டு, அங்குள்ள மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் குற்றவாளி சென்னையில் கைது செய்யப்பட்டு விட்டதாகவும், நாளை (16/10/2018) மாலை 2 மணிக்கு முதுகுளத்தூர் காவல் நிலையம் கொண்டு வரப்படுவதாகவும் ADSP வெள்ளத்துரை தெரிவித்ததால் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. அதே சமயம் நாளை மாலை 2 மணிக்கு குற்றவாளி முதுகுளத்தூர் வரவில்லை என்றால் கடையடைப்பு மற்றும் பேருந்தை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாள் பதட்டம் நீடிக்கிறது.
செய்தி: அ.சா.அலாவுதீன்.மூத்த நிருபர்
( பூதக்கண்ணாடி மாத இதழ்)- கீழை நியூஸ்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அபுதாபியில் இருந்து உம்ரா வந்த சென்னை புதுப்பேட்டையை சேர்ந்தவர் சாலை விபத்தில் மரணம்! இன்று (15/10/2018) அல்ஹஸாவில் நல்லடக்கம்..
அபுதாபியில் இருந்து தம் மனைவி பிள்ளையோடு ரோடு மார்க்கமாக புனித உம்ரா பயணம் வருகை தந்த சென்னை புதுப்பேட்டையை சேர்ந்த மக்தூம் பதுருதீன்(வயது-32) என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை(12.10.2018)அன்று அதிகாலை அல்ஹஸ்ஸா ஹாரத் என்னும் இடத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இவர் அபுதாபி ஈ.டி.ஏ.மெல்கோ கம்பெனியில் பணி புரிந்து வந்துள்ளார்.கடந்த வியாழன் அன்று அபுதாபியில் இருந்து குடும்பத்துடன் உம்ரா புறப்பட்டு வந்த போது வெள்ளிக்கிழமை அதிகாலை கடும் பனி மூட்டத்தின் காரணமாக ஓட்டுனர் ரோடு தெரியாமல் நிலை குலைந்து வாகனத்தை மின் கம்பத்தில் மோதியதாக கூறப்படுகிறது.
இதில் ஓட்டுனர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்; மூன்று பேர் சிறு காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.மக்தூம் பதுருதீன் என்பவர் மட்டும் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார்.
இந்த சம்பவம் கேள்விப்பட்டதும் அல்ஹஸ்ஸா கிளை இந்தியன் சோஷியல் ஃபோரம் நிர்வாகி ஜின்னா உடனடியாக மருத்துவமனைக்கு சென்று விசாரித்து தேவையான உதவிகளை செய்தார். பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளை தமது வீட்டில் அமர வைத்து விட்டு இறந்தவரின் ஜனாஸா நல்லடக்கத்திற்கான ஏற்பாடுகளையும் விரைவு படுத்தினார்.
வெள்ளி மற்றும் சனி ஆகிய நாட்கள் அரசு விடுமுறை என்பதால், ஞாயிறு அன்று காலையிலே இந்திய தூதரகத்தின் உதவியோடு சவூதி அரசின் மருத்துவத்துறை மற்றும் காவல்துறையின் அனைத்து ஆவணங்களையும் பெற்று திங்கட்கிழமை அன்று நல்லடக்கத்திற்கான ஏற்பாடுகளை செய்தார். அதன்படி திங்கட்கிழமை(15.10.2918) இன்று மாலை அஸருக்குப்பின் இறந்தவரின் உடல் அல்ஹஸ்ஸா அல்ஹஃபூப் சல்ஹியா அடக்கஸ்தலத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அங்கே நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
விபத்து செய்தி கேள்விப்பட்டதும் தாமதமின்றி செயல்பட்டு உரிய உதவிகளை செய்து கொடுத்த இந்தியன் சோஷியல் ஃபோரம் நிர்வாகி ஜின்னாவுக்கும் பிற நிர்வாகிகளுக்கும் இந்திய தூதரகம் மற்றும் சவூதி அரசுக்கும் இந்தியா ஃபிரட்டர்னிடி ஃபோரம் தம்மாம் தலைவர் சகோ.பைசல் மற்றும் இந்தியன் சோஷியல் ஃபோரம் தேசிய துணைத்தலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸி ஆகியோர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
செய்தி தொகுப்பு:கீழை அரூஸி.
You must be logged in to post a comment.