சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பான வழக்கில் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமலஹாசனுக்கு முன் ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமலஹாசன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில்,” அரவக்குறிச்சி பொதுக்கூட்டத்தில் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையிலோ, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலோ நான் பேசவில்லை. நாதுராம் கோட்சே குறித்து நான் பேசியது சர்ச்சைக்குரியது அல்ல.
அதோடு, என் மீது வழக்கு தொடர்ந்தவர் நிகழ்விடத்தில் இல்லாத நிலையில், கேட்டறிந்த தகவல் அடிப்படையில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கால் என் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மாநில அமைச்சர் ஒருவர் எனது நாக்கை அறுக்க வேண்டும் என ஊடகங்களில் வெளிப்படையாக பேசியுள்ளார். ஆகவே இந்த வழக்கில் எனக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்..
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில் இன்று நீதிபதி புகழேந்தி, கமலஹாசனுக்கு முன் ஜாமின், வழங்கி உத்தரவிட்டார். பொதுவாக ஒருவருக்கு முன் ஜாமின் வழங்கும் போது, அவருக்கு வழங்கப்படும் நிபந்தனை கமலஹாசனுக்கு பொருந்தும். அதாவது 15 நாட்களுக்குள்ளாக கமலஹாசன் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரு நபர் ஜாமின் உத்திரவாதம் அளிக்க வேண்டும், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
You must be logged in to post a comment.