தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் படி பைக் சாகசம் புரியும் நபர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில், இருசக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் சாகசத்தில் ஈடுபட்ட நபருக்கு அபராதம் விதித்து வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. சுரண்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் தொடர்ச்சியாக சாகசம் செய்தும், அபாயகரமான முறையில் வாகனத்தை இயக்கியும் அதனை வீடியோ பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளைஞர் ஒருவர் பதிவிட்டு வந்துள்ளார். இது குறித்து காவல்துறை விசாரணையில், பங்களா சுரண்டையைச் சேர்ந்த செல்வன் என்பவரின் மகன் சாலமன் பிரவீன் (20) என்பது தெரியவந்தது. இந்நிலையில், மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் ரூபாய் 10,500 அபராதம் விதிக்கப்பட்டு அவரின் இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இனிவரும் காலங்களில் இது போன்ற செயலில் ஈடுபட்டால் கைது செய்து சிறையில் அடைக்கப்படும் என்று காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.