10
பண்டிகை மாதமான ரமலான் மாதத்தில் பொதுமக்கள் “டிஜிட்டல் இந்தியா”வில் பண பட்டுவாடாவிற்கு தானியங்கி ஏ.டி.ம் எந்திரங்களையே சார்ந்து இருக்கும் நிலைமை. ஆனால் கடலாடி, முதுகுளத்தூரில் தேசிய வங்கிகளின் ஏடிஎம் மையங்கள் செயல்படாததால், வாடிக்கையாளர்கள் மிகவும்அ வதிப்பட்டு வருவதாக கூறுகின்றனர்.
கடலாடி தாலுகாவைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராமமக்கள் கடலாடியில் செயல்பட்டு வரும் ஒரு தேசிய வங்கியிலும், முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முதுகுளத்தூரிலுள்ள மூன்றுக்கும் மேற்பட்ட தேசிய வங்கிகளில் கணக்கு தொடங்கி வரவு செலவு செய்து வருகின்றனர். இதில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களும், வியாபாரிகள், தொழிலாளிகள், நூறு நாள் வேலை பார்க்கும் கூலி தொழிலாளர்கள் வரவு செலவு செய்து வருகின்றனர்.
இப்பகுதியில் இயங்கும் தேசிய வங்கிகளில் வங்கி வேலை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் பணம் எடுப்பதற்கு வசதியாகவும், வங்கியில் மக்களின் கூட்டத்தை குறைக்கும் நடவடிக்கையாக வங்கிகள் சார்பாக, கடலாடியில் காமராஜர் சிலை அருகேயும், முதுகுளத்தூரில் வாகைக்குளம், காந்தி சிலை, தபால் நிலையம், செல்லியம்மன் கோயில் தெரு ஆகியவற்றில் ஏடிஎம் மையங்கள் அமைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை தினங்கள் மற்றும் மாலை, இரவு என எந்நேரமும் அவசரத்திற்கு பணம் எடுத்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக இந்த மையங்கள் செயல்படாமல் கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் அவசர தேவைக்கு பணம் எடுக்க முடியாமல் கடும் அவதிப்பட்டு வருவதாக புகார் கூறுகின்றனர். எனவே ஏ.டி.எம் இயந்திரத்தை மீண்டும் செயல்படுத்த, வங்கி நிர்வாகம் முன்வரவேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
You must be logged in to post a comment.