உழைப்பவர்களின் உன்னதத்தை எடுத்துரைக்கும் வகையில் டிசைன் ஒவியப் பள்ளியின் ஏழாம் ஆண்டை முன்னிட்டு மேஜிக்கல் எக்ஸ்பிரசன்ஸ் 2018 நிகழ்வில் வியர்வையின் வண்ணங்கள் தலைப்பில் மூன்று நாள் ஓவியக் கண்காட்சி திருச்சியில் துவங்கியது. ஓவிய கண்காட்சி துவக்க விழாவில் சிறப்பு அஞ்சல் உறை சிறப்பு முதல் நாள் அஞ்சல் முத்திரையுடன் அஞ்சல் உறை வெளியீட்டு விழா நடைபெற்றது. மத்திய மண்டல தபால்துறைத் தலைவர் அம்பேஷ் உப்மன்யூ சிறப்பு அஞ்சல் உறையினை வெளியிட இருதய சிகிச்சை நிபுணர் மருத்துவர் செந்தில் குமார் பெற்றுக் கொண்டார்.
முதுநிலை அஞ்சலகங்கள் கண்காணிப்பாளர் கணபதி சுவாமிநாதன், டிசைன் ஓவியப் பள்ளி இயக்குநர் நஸ்ரத்பேகம், அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் மதன், ரகுபதி, யோகாசிரியர் விஜயகுமார் உட்பட பலர் நிகழ்வில் பங்கேற்றனர். பின் கண்காட்சியினை பார்வையிட்டனர். வியர்வையின் வண்ணங்கள் ஓவியக் கண்காட்சியில் வியர்வையின் வண்ணங்கள் எனும் கருப்பொருள் தலைப்பில் கடைநிலை உழைப்பாளியின் உன்னதத்தை வெளிக்கொணரும் விதமாக 40 மாணவர்கள் 4 ஓவியங்கள் வீதம் 160 ஓவியங்களை காட்சிப்படுத்தியிருந்தனர்.
அதில் 40 விதமான தொழில் புரியும் உழைப்பாளர்கள் ஓவியங்கள் காட்சிப்படுத்தப் படுத்தப்பட்டிருந்தன. யானைப்பாகன் , பூ வியாபாரி, காய்கறி விற்பவர், பட்டாணி விற்கும் பாட்டி, பொற்கொல்லர், தப்பாட்ட கலைஞர், ஆட்டோ ஓட்டுனர், மீனவர், ரிக் ஷா ஒட்டுனர், பலூன் விற்பவர், கட்டிட தொழிலாளர்கள், ஆடு மேய்ப்பவர், பால் விற்பனையாளர், பொம்மை தயாரிப்பவர், வெற்றிலை வியாபாரி, இடுகாட்டு பணியாளர், சுமை தூக்கும் தொழிலாளர், இளநீர் விற்பவர், மின்சார ஊழியர், தென்னை தொழிலாளர், குறி சொல்வோர், கூடை முடைவோர், பஞ்சு மிட்டாய் விற்பவர், மண்பாண்டம் செய்பவர், கைரேகை பார்ப்பவர், நெசவு தொழிலாளர், விவசாயி, செருப்பு தைப்பவர், மீன்பிடி தொழிலாளர், மின்சாரம் விநியோகம் பழுது பார்ப்பவர், பூ வியாபாரி, தேங்காய் மட்டை உரிப்பவர், பொம்மை மிட்டாய் விற்பவர், ஆட்டோ ஓட்டுநர், இரும்பு பட்டறை தொழிலாளர், பலகாரம் தயாரிப்பவர், எரிவாயு உருளை வழங்குபவர், குடம் விற்பவர், பீடித் தொழிலாளர், சலவைத் தொழிலாளர், பனை மரம் ஏறுபவர், சைக்கிள் பழுது பார்ப்பவர், என ஓவியங்கள் இடம் பெற்றன. ஓவியங்களுடன் அத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஒருவரை கண்காட்சிக்கு அழைத்து வந்து சிறந்த உழைப்பாளர் என சிறப்பிக்கின்ற நிகழ்வினையும் தமிழகத்தில் முதன் முறையாக செய்துள்ளனர். கற்பனைத் திறனில் உருவாக்கப்பட்டுள்ள ஓவியங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அதில் கதக் கலைஞர், மலர்கள், மலையில் மல்லுக்கட்டும் மான்கள், கடல் கன்னிகள், மூதாட்டியும் முக மலர்ச்சியும், தம்புரா வாசிக்கும் பெண், ஆடுகளும் குட்டிகளும், பறவைகள், பாய்மரக் கப்பல்கள், கண்ணாடி குடுவைகள், கப்பற்படையின் சாகசங்கள், சிக்கு புக்கு ரயில், நங்கூரமிட்ட படகுகள், திருக்கோவில் திருப்பணிகள், தஞ்சாவூர் ஒவியத்தில் விநாயகர், முருகன், கெஜலெட்சுமி என 6 வயது முதல் 15 வயது கொண்ட சிறுவர்கள் சிருஷ்டி கர்த்தாவாகி உருவாக்கிய ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஒவியத்தில் உணர்வுகளை, உடல் மொழிகளை, முக அசைவுகளை தூரிகையில் வெளிக்கொண்டு வந்துள்ளனர் .எளிமையான வாழ்க்கையினை மேற்கொள்பவர்கள் தன் வாழ்க்கையில் சந்தித்த வலியையும், துயரங்களையும், வடித்த வியர்வைகளையும் வண்ண தூரிகையால் கண் முன்னே கொண்டு வந்துள்ளனர். சாமானியரின் உழைப்பு, சிரிப்பு, கருணை என வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் வாழ்க்கையினை தத்ரூபமாக பென்சில் டிராயிங்கிலிருந்து பென் டிராயிங்கிலும், ஆயில் கலரிலிருந்து அக்ரலிக் கலர் வரை பயன்படுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட ஓவியங்களை 31 மாணவிகளும், 11 மாணவர்களும் காட்சிப்படுத்தியுள்ளனர்.
கண்காட்சி நிறைவு விழாவில் காவல் துறை துணை ஆணையர் மயில்வாகணன், ஓவியச் சக்ரவர்த்தி ஜெயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். டிசைன் ஓவியப் பள்ளி இயக்குனர் நஸ்ரத் பேகம் கண்காட்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தார்.
You must be logged in to post a comment.