விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான அச்சகங்கள் மற்றும் சிறுகுறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. தமிழக அரசு, பரபரப்பு நேர மின் கட்டணம் என்றும், 430 சதவிகிதம் அளவிற்கு உயர்த்தியுள்ள நிலை மின் கட்டணம் உட்பட பல்வேறு வகைகளில் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதனால் சிவகாசி பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. கூடுதல் மின் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தியும், பரபரப்பு நேர மின் கட்டணத்தை முழுமையாக திரும்பப் பெற வலியுறுத்தியும், தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு சார்பில், இன்று காலை கவன ஈர்ப்பு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. சிவகாசி காரனேசன் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, மாநகராட்சி காமராஜர் பூங்கா வரையில், மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தினசரி காலண்டர் உற்பத்தியாளர் சங்க தலைவர் ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்ற, கவன ஈர்ப்பு மனித சங்கிலி போராட்டத்தில், சிவகாசி மாஸ்டர் பிரிண்டர்ஸ் அசோசியேசன், தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்கம், தமிழ்நாடு பாடநூல் அச்சிடுவோர் நல சங்கம் உள்ளிட்ட 9 அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள், அச்சக உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தமிழக அரசு, மின் கட்டணக் குறைப்பு அறிவிக்கும் வரையில், தொடர் போராட்டங்கள் நடைபெறும் என்று மின் நுகர்வோர் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறினர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.