இராமநாதபுரம் அருகே குளம் உருவாக்கி மதில் சுவர் கட்டிய சரித்திர கல்வெட்டு கண்டுபிடிப்பு..

இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே வளநாடு முருகன் கோயில் வளாகத்தில் ஒரு கல்வெட்டு இருப்பதாக வேளானூர் பள்ளி கணித ஆசிரியர் கு.முனியசாமி தகவலின்பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவர் வே.ராஜகுரு அக்கல்வெட்டைப் படி எடுத்து படித்து ஆய்வு செய்தார்.

இது குறித்து வே.ராஜகுரு கூறியதாவது, “வளநாடு முருகன் கோயில் வளாகத்தில் இரண்டரை அடி அகலம், 1 அடி உயரம் உள்ள செவ்வக வடிவிலான ஒரு பலகைக் கல்லில், 11 வரிகள் கொண்ட ஒரு கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.

வளநாட்டில் கடவுள் அருளால் சிறப்புற்று இருக்கும் கருப்பபிள்ளை என்பவர், இவ்வூர் முருகன் கோயிலுக்கு வடக்கில் உள்ள திருக்குளத்தை உருவாக்கியதாகவும், அதன்பிறகு அவரது பேரன் குருந்த பிள்ளையாகிய தங்கச்சாமியாபிள்ளை என்பவர் அக்குளத்தைச் சுற்றி திருமதில் மற்றும் படித்துறை அமைத்துக் கொடுத்ததாகவும் கி.பி.1886 ஆம் ஆண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் விய வருடம் சித்திரை மாதம் 29 என தமிழ் ஆண்டும், 1886, மே 2 என ஆங்கில ஆண்டும் கொடுக்கப்பட்டுள்ளது. துரைகள் மற்றும் கடவுள் அனுக்கிரகத்தால் இது கட்டப்பட்டது என தெரிவித்துள்ளதன் மூலம் ஆங்கிலேயர் அனுமதி பெற்று மதில் சுவர் கட்டியதாக தெரிகிறது. பெரிய அளவிலான இக்குளத்தைச் சுற்றி அமைக்கப்பட்ட மதில் சுவர் மூன்று அடி அகலத்தில் செங்கல், சுண்ணாம்பு கொண்டு கட்டப்பட்டுள்ளது.

தற்போது மதில் சுவர் முழுவதும் சேதமடைந்து விழுந்து விட்டதால் அதில் இருந்த இக்கல்வெட்டு கோயில் பகுதிக்கு வந்திருக்கலாம். இங்கு கருப்பபிள்ளை பெயரில் ஒரு மடம் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இவ்வாறு அவர் தெரிவித்தார்.