இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 2-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இதனையொட்டி இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட உள்ளது.ஆரணி பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகள் குறித்து விழாக்குழுவினர்களுடன் போலீசார் ஆலோசனை கூட்டம் நடத்தி அறிவுரை வழங்கினர். ஆரணி தனியார் திருமண மண்டபத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட விழாக்குழுவினர் கலந்து கொண்டனர். போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விநாயகமூர்த்தி, ஜெயபிரகாஷ், சாலமோன் ராஜா, ரேகாமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆரணி நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாமலை வரவேற்றார்.ஆலோசனை கூட்டத்தில் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில் பேசுகையில், “விநாயகர் சிலை வைத்து பூஜை செய்பவர்கள் காவல் துறையினர், சம்பந்தப்பட்ட நகராட்சி அல்லது பேரூராட்சி, ஊராட்சி மன்றங்களில் அனுமதி பெற வேண்டும். 10 அடி உயரத்துக்கு மேல் சிலைகள் வைக்கக்கூடாது. களிமண்ணால் செய்யப்பட்டிருக்க வேண்டும். அங்கு முதலுதவிக்கான மருத்துவ உபகரணங்கள், தண்ணீர் மற்றும் மணல் நிரப்பிய வாளிகள் வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு சிலைக்கும் விழாக் குழுவைச் சேர்ந்த பொறுப்பாளர்களே 24 மணிநேரமும் பாதுகாப்பு பணியை கவனிக்க வேண்டும்.வருகிற 4-ந் தேதி பகல் 2 மணியளவில் விநாயகர் சிலைகளை அண்ணா சிலை அருகே கொண்டு வந்துவிட வேண்டும். அங்கிருந்து ஊர்வலமாக செல்ல வேண்டும். ஒரு சிலைக்கு பின்னால் ஒரு சிலைவரவேண்டும். முந்திச் செல்லும்போது பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்கப்பட வேண்டும்” என்ற அறிவுரைகளுடன் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த துண்டுப்பிரசுரங்களையும் வழங்கினார்.கூட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தேவராஜ், தரணி, பார்த்தசாரதி, மன்னர்மன்னன் உள்பட போலீசாரும், விழாக்குழுவை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். முடிவில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் நன்றி கூறினார்.
12
You must be logged in to post a comment.