2021 சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பில் ஓபிசி பிரிவையும் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவும் 2011 சாதிவாரி கணக்கெடுப்பு விபரங்களை மத்திய அரசு உடனே வெளியிடவும் வலியுறுத்தி தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற கோரி மனு.இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 16(4) அரசு நிர்வாகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு போதிய பிரதிநிதித்துவத்தை உரிமையாக வழங்குகிறது. ஆனால் 1951 முதல் ஓபிசி மக்களின் உரிமைகளை மறுக்கும் உள்நோக்கத்தோடு எஸ்சி எஸ்டி பிரிவுகளுக்கு மட்டும் கணக்கெடுப்பு எடுத்துக்கொண்டு ஓபிசி பிரிவினரை புறக்கணிப்பது அநீதியானது. 2011ல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியும் அதில் ஓபிசி பிரிவை சேர்காமல் விட்டது மேலும் ஒரு துரோகமாகும். மேலும் எடுக்கப்பட்ட அந்த சாதிவாரிய கணக்கெடுப்பையும் வெளியிடாமல் இருப்பது அநீதியை நிலைநிறுத்தும் சதி.
தமிழகம் சமூகநீதியின் முன்னோடி மாநிலம் என்று மார்தட்டிகொண்டாலும், தமிழகத்தின் 69% இடஒதுக்கீட்டுக்கு போதிய புள்ளிவிபரங்கள் இன்மையே பெரும் சவாலாக உள்ளது என்று தெரிந்தும், அதை பல நீதிமன்ற வழங்குகள் சுட்டிக்காட்டியும், மஹாராஸ்டிரா, ஒரிசா, பீகார் போன்ற மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே தீர்மானம் நிறைவேற்றியும் தமிழக சட்டமன்றம் கண்டுகொள்ளாமல் இருப்பது தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சமூகநீதியை காக்க தவறிவிட்டார்கள் என்பது தெளிவாகியுள்ளது.ஓபிசி கணக்கெடுப்பு 90 ஆண்டுகள் நடத்தாததால் 80 கோடி ஓபிசி மக்கள் உரிமைகள் மறுக்கப்பட்டு பல படித்த பிள்ளைகள் தற்கொலை செய்து மடிந்து வருகின்றனர். நாங்கள் பிறந்தது பசியில் சாவதற்கா? எங்கள் உரிமை, எங்கள் பங்கு, எங்கள் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்க ஓபிசி கணக்கெடுப்பு உடனே நடத்த வேண்டும்.
உலக வரலாற்றில் ஜனநாயக நாட்டில் வேறெங்கும் பெரும்பான்மை மக்கள் ஏமாற்றப்பட்டதாக வரலாறு இல்லை. ஆனால் இந்தியாவில்தான் 60% மக்களுக்கு எல்லா உரிமைகளும் மறுக்கப்படுகிறது. இது முடிவுக்கு வரவேண்டும். இடஒதுக்கீடு சலுகையல்ல. அது எங்கள் பங்கு. 2021ல் கணக்கெடுப்பில் ஓபிசி கணக்கெடுப்பு நடத்தவில்லையென்றால் 80 கோடி மக்கள் கணக்கெடுப்பில் கலந்துகொள்ள மாட்டோம் என்பதை மிகுந்த வருத்ததோடு தெரிவித்துக்கொள்கிறோம். அரசுக்கு ஓபிசி கணக்கெடுப்பு நடத்துவதால் கூடுதல் செலவோ வேறு சிரமங்களோ ஏற்படபோவதில்லை. மாறாக கோடான கோடி மதிப்பிலான புள்ளிவிபரங்கள் கிடைக்கும். ஓபிசி மக்களுக்கு முறையான திட்டமிட்டு அவர்களை முழுமையாக வளர்ச்சியடைய செய்யலாம்.
எனவே 2021 கணக்கெடுப்பு மற்றும் 2021 சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பில் ஓபிசி பிரிவை சேர்க்கவும் 2011 சாதிவாரி கணக்கெடுப்பு விபரங்களை வெளியிடவும் தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற 6 கோடி தமிழக ஓபிசி மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் எல்லா கணக்கெடுப்புக்களையும் புறக்கணிப்பதோடு விரைவில் அனைத்து பாராளுமன்ற சட்ட உறுப்பினர்களின் அலுவலகம் வீடுகளை முற்றுகையிடுவோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். எனவே 6 கோடி தமிழக மக்களின் கோபத்தையும் கோரிக்கையையும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.என AIOCC & அனைத்து ஓபிசி/டி.என்.டி சமூகங்கள் சாா்பில் தொிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.