Home செய்திகள் தொழில்துறை வளர்ச்சிக்கு வித்திட்ட, உலகப் புகழ்பெற்ற இந்திய இயற்பியலாளர் ‘இந்திய அறிவியல் தொழிலக ஆய்வகங்களின் தந்தை’ பத்ம பூஷன் எஸ். எஸ் பட்நாகர் பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 21, 1894)..

தொழில்துறை வளர்ச்சிக்கு வித்திட்ட, உலகப் புகழ்பெற்ற இந்திய இயற்பியலாளர் ‘இந்திய அறிவியல் தொழிலக ஆய்வகங்களின் தந்தை’ பத்ம பூஷன் எஸ். எஸ் பட்நாகர் பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 21, 1894)..

by mohan

சாந்தி சுவரூப் பட்நாகர் (Sir Shanti Swaroop Bhatnagar) பிப்ரவரி 21, 1894ல் பஞ்சாப் மாகாணத்தின் (இன்றைய பாகிஸ்தான்) ஷாப்பூர் என்ற இடத்தில் பிறந்தார். குழந்தையாக இருந்தபோதே தந்தையை இழந்தார். சிக்கந்தராபாத்தில் ஆரம்பக்கல்வி பயின்றார். லாகூர் ஃபோர்மன் கிறிஸ்தவக் கல்லூரியில் 1916ல் இயற்பியில் பி.எஸ்சி. பட்டமும், வேதியியலில் 1919ல் எம்.எஸ்சி. பட்டமும் பெற்றார். லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் டி.எஸ்சி. ஆய்வியல் பட்டம் பெற்றார். 1921-ல் நாடு திரும்பிய இவர், காசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். மூன்றாண்டுகளுக்குப் பிறகு லாகூரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் வேதியியல் ஆய்வகத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டார். கூழ்மங்கள் (colloids), பால்மங்கள் (emulsions), தொழிலக வேதியியல் (industrial chemistry), காந்த வேதியியல் தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். 1928-ம் ஆண்டு கே.என்.மாத்தூருடன் இணைந்து காந்தப் பண்புகளை (magnetic interference balance) அளவிடும் கருவியைக் கண்டறிந்தார். ‘லாகூரின் தந்தை’ எனப் போற்றப்பட்ட கங்காராம் அகர்வால், தன் கரும்பு ஆலைகளில் வீணாகும் சோகைகளை என்ன செய்வது என்று இவரிடம் ஆலோசனை கேட்டார். இவற்றைக்கொண்டு கால்நடைத் தீவனம் தயாரிக்கும் முறையை உருவாக்கினார். ஜவுளி ஆலைகள், மாவு அரவை ஆலைகள், எண்ணெய் ஆலைகள், எஃகு ஆலைகளின் பல்வேறு தொழிலகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் கண்டார். ராவல்பிண்டியில் இயங்கிய ஸ்டீல் பிரதர்ஸ் என்ற பெட்ரோலியத் துரப்பண நிறுவனம், தனது தொழிலகப் பிரச்சினைக்குத் தீர்வு கோரி இவரை நாடியது. இதற்கும் கூழ்ம வேதியியலின் உதவியால் தீர்வுகண்டார். 1935ல் சக விஞ்ஞானி கே.என்.மாத்தூருடன் இணைந்து, இவர் எழுதிய ‘ஃபிசிகல் பிரின்சிபல்ஸ்’ மற்றும் ‘அப்ளிகேஷன்ஸ் ஆஃப் கெமிஸ்ட்ரி’ என்ற நூல் இன்றும் அந்தத் துறையின் முதன்மை நூலாக விளங்குகிறது.

பட்நாகர் முயற்சியால், பிரிட்டனில் உள்ளது போன்ற அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி வாரியம் 1940ல் தொடங்கப்பட்டது. இதன் இயக்குநராக இவர் நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தொழிலக ஆராய்ச்சி பயன்பாட்டுக் குழுவும் (ஐ.ஆர்.யு.சி.) அமைக்கப்பட்டது. இந்த இரு அமைப்புகளையும் ஒருங்கிணைத்து அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மன்றம் (சி.எஸ்.ஐ.ஆர்) தொடங்கப்பட்டது. இதன்மூலம், தேசிய வேதியியல் ஆய்வு மையம், தேசிய இயற்பியல் ஆய்வு மையம், கண்ணாடி, பீங்கான் தொடர்பான ஆய்வு மையம், எரிபொருள் ஆய்வு நிலையம் ஆகியவற்றை இவர் நிறுவினார். இந்தியா விடுதலைப் பெற்றதும் சி.எஸ்.ஐ.ஆர். அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தியா விடுதலை பெற்ற பிறகு அமைக்கப்பட்ட அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் முதல் இயக்குநராக பணியாற்றியவர். ஓர் ஆங்கிலேய நிறுவனம் எண்ணெய்க் கிணறு தோண்டும்போது ஏற்பட்ட தொழில் நுட்பச் சிக்கலை எளிய முறையில் தீர்த்து வைத்தவர். இந்தியாவில் ஆய்வு மையங்கள் தோன்றக் காரணமானவர். பெட்ரோலியக் கழிவுகளைப் பயன்படு பொருளாக மாற்றுவதற்கு வழிமுறைகள் கண்டறிந்தவர். 1955ல் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதைப் பெற்றவர். இவருடைய பெயரால் சாந்தி சுவரூப் பட்நாகர் விருது வழங்கப்படுகிறது. இந்திய அறிவியல் துறையையும் தொழில்துறையையும் இணைத்து நாட்டு வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்த சாந்தி ஸ்வரூப் பட்நாயக் ஜனவரி 1, 1955ல் தனது 61வது அகவையில் புது தில்லியில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். இவரது நினைவைப் போற்றும் வகையில், நாட்டின் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிக்குத் துணை புரியும் விஞ்ஞானிகளுக்கு ‘சாந்தி ஸ்வரூப் பட்நாகர்’ விருது வழங்கப்பட்டு வருகிறது. Source By: Wikipedia and Hindu Tamil. தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!